Skip to main content

முதல்வர் சொன்னதன் பின்னணி என்ன? - அழுத்தம் கொடுக்கும் பாஜக!

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

cm stalin dmk and bjp issue

 

தென்மாவட்டங்களில் கடந்த வாரம் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நாகர்கோவிலில் கலைஞரின் சிலை திறப்பு விழாவில் பேசியபோது, "தி.மு.க. ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது'' என்று குற்றம் சாட்டியிருந்தார். முதல்வரின் அந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தன. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தி.மு.க. ஆட்சி மீது கை வைத்துப் பார்…” என்று கொந்தளித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

நாகர்கோவில் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கோவையில் மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதும் தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக குற்றம் சாட்டியிருந்தார் மு.க.ஸ்டாலின். ஆட்சிக் கவிழ்ப்பு குறித்து தொடர்ச்சியாக ஸ்டாலின் பேசி வருவது தமிழக அரசியலில் பல்வேறு தரப்பிலும் விவாதங்களைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. மிகப்பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருக்கும் தி.மு.க. அரசை அவ்வளவு எளிதாகக் கவிழ்க்க முடியாது என்ற சூழல் இருக்கும் நிலையில், ஸ்டாலின் அப்படி பேசியதற்கு ஏதேனும் பின்னணிகள் இருக்கிறதா? என்று ஆராயத் தொடங்கியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

 

இந்த நிலையில், முதல்வரின் குற்றச்சாட்டுக்கு பின்னணிகள் இருக்கிறதா என்று திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான டி.கே.எஸ்.இளங்கோவனிடம் நாம் பேசியபோது, “மாநில அரசுகளை ஒன்றிய அரசு கலைக்கும் விவகாரத்தில், கர்நாடக முன்னாள் முதல்வர் பொம்மை தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்திருக்கிறது. அதன்படி, மாநில அரசைக் கலைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதித்து பெரும்பான்மையுடன் பாஸானால் மட்டுமே கலைக்க முடியும். அந்தவகையில், அரசியலமைப்புச் சட்டம் 356-வது பிரிவைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு மாநில அரசுகளைக் கலைப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. ஆனால், ஒன்றியத்தில் மோடி அரசு அமைந்த பிறகு, மாநில அரசுகளைக் கவிழ்ப்பதும், ஆட்சியிலுள்ள ஒரு அரசை அகற்றி மற்றொரு ஆட்சியை உருவாக்குவதும் அடிக்கடி நடக்கிறது. இதற்கு பல உதாரணங்களைக் கூறமுடியும்.

 

சட்டப்பிரிவு 356-யை பயன்படுத்த தற்போதைய மோடி அரசால் முடியாது. காரணம், நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் பா.ஜ.க. கூட்டணிக்கு போதுமான பெரும்பான்மை பலம் கிடையாது. அதனால் ஆட்சிக் கலைப்பு என்பதற்கு வாய்ப்பில்லை. அதேசமயம், சட்டப்பிரிவு 355வது பிரிவைப் பயன்படுத்தி ஒரு மாநில அரசை முடக்க முடியும். அதற்கு வலுவான சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இருக்க வேண்டும். தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் இல்லை. சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. இதனை மோடி அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எந்த ரூபத்திலாவது உருவாக்க நினைக்கிறார்கள். சாதி, மத மோதல்களை ஏற்படுத்தவும் திட்டமிடுகிறார்கள்.

 

பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொல்லப்படுகிறார்கள் என்கிற வதந்தி பரப்பப்பட்டதன் பின்னணியும் அதுதான். இன்றைக்கு தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பாகவும் இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கும் தமிழர்களுக்கும் மோதலை உருவாக்குவதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என மனப்பால் குடிக்கிறது ஒன்றிய அரசு. இதுபோன்ற சதித்திட்டங்களை ஒன்றியத்தில் இருப்பவர்கள் உருவாக்குவதாக முதல்வருக்கு தகவல் கிடைத்திருக்கும். அந்த பின்னணியில்தான், தி.மு.க. அரசை அகற்ற சதி நடப்பதாக முதல்வர் குற்றம் சாட்டியிருக்கக் கூடும்” என்று சுட்டிக்காட்டினார். 

 

தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதியிடம் நாம் பேசியபோது, “தி.மு.க. ஆட்சியின் மீது கை வைத்துப் பார்... தமிழ்நாட்டில் பா.ஜ.க.காரன் யாரும் உயிருடன் இருக்க முடியாது என மக்கள் நினைக்கிறார்கள் என்றுதான் நான் பேசினேன். உயிருடன் இருக்க முடியாது என்று நான் சொல்லவில்லை. என் பேச்சை திரித்துப் பரப்பி வருகிறார்கள். பொதுவாக, அமைதிப் பூங்காவாக இருக்கும் திராவிட மாடல் ஆட்சியில் தொழில் வளர்ச்சி தொடங்கி அனைத்து நிலைகளிலும் சிறப்பாக; முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் வெறுப்பரசியலை நடத்தி வருகிறது பா.ஜ.க. தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மாற்றலாம் என தினந்தோறும் ஏதேனும் ஒரு வதந்தியைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

 

‘இந்தியாவுக்கு வழிகாட்ட ஸ்டாலின் முன்வர வேண்டும்; முயற்சிக்க வேண்டும்' என்றெல்லாம் இந்தியத் தலைவர்கள் பலரும் சொல்லி வருவதை பா.ஜ.க.வினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகிறார்கள் என்கிற வதந்தியையும் பா.ஜ.க.தான் பரப்பியது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க. அண்ணாமலை, "ராணுவத்தினரின் கையில் துப்பாக்கி இருக்கு. அதில் குண்டு இருக்கிறது. ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார். நீங்க சுட்டுத் தள்ளிட்டு வந்துக்கிட்டே இருங்க. மிச்சத்தை பா.ஜ.க. பார்த்துக்கொள்ளும்'' என வன்முறையையும் தீவிரவாதத்தையும் தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். அதேபோல, சாதி, மதப் பிரிவினை அரசியலைத் தூண்டி சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தவும் முயற்சித்து வருகிறார்கள்.

 

இப்படிப்பட்ட சம்பவங்களால் பதற்றத்தை உருவாக்கி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதே பா.ஜ.க.வின் நயவஞ்சகத் திட்டம். அதன் மூலம் தி.மு.க. அரசை முடக்க அவர்கள் சதி செய்வதாகவே தெரிகிறது. அதன் பின்னணிகளை அறிந்ததால்தான் முதல்வர் ஸ்டாலின், தி.மு.க. அரசை அகற்ற சதி நடக்கிறது எனச் சொன்னார்” என்று விவரித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.