Skip to main content

முதல்வர் சொன்னதன் பின்னணி என்ன? - அழுத்தம் கொடுக்கும் பாஜக!

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

cm stalin dmk and bjp issue

 

தென்மாவட்டங்களில் கடந்த வாரம் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நாகர்கோவிலில் கலைஞரின் சிலை திறப்பு விழாவில் பேசியபோது, "தி.மு.க. ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது'' என்று குற்றம் சாட்டியிருந்தார். முதல்வரின் அந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தன. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தி.மு.க. ஆட்சி மீது கை வைத்துப் பார்…” என்று கொந்தளித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

நாகர்கோவில் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கோவையில் மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதும் தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக குற்றம் சாட்டியிருந்தார் மு.க.ஸ்டாலின். ஆட்சிக் கவிழ்ப்பு குறித்து தொடர்ச்சியாக ஸ்டாலின் பேசி வருவது தமிழக அரசியலில் பல்வேறு தரப்பிலும் விவாதங்களைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. மிகப்பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருக்கும் தி.மு.க. அரசை அவ்வளவு எளிதாகக் கவிழ்க்க முடியாது என்ற சூழல் இருக்கும் நிலையில், ஸ்டாலின் அப்படி பேசியதற்கு ஏதேனும் பின்னணிகள் இருக்கிறதா? என்று ஆராயத் தொடங்கியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

 

இந்த நிலையில், முதல்வரின் குற்றச்சாட்டுக்கு பின்னணிகள் இருக்கிறதா என்று திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான டி.கே.எஸ்.இளங்கோவனிடம் நாம் பேசியபோது, “மாநில அரசுகளை ஒன்றிய அரசு கலைக்கும் விவகாரத்தில், கர்நாடக முன்னாள் முதல்வர் பொம்மை தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்திருக்கிறது. அதன்படி, மாநில அரசைக் கலைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதித்து பெரும்பான்மையுடன் பாஸானால் மட்டுமே கலைக்க முடியும். அந்தவகையில், அரசியலமைப்புச் சட்டம் 356-வது பிரிவைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு மாநில அரசுகளைக் கலைப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. ஆனால், ஒன்றியத்தில் மோடி அரசு அமைந்த பிறகு, மாநில அரசுகளைக் கவிழ்ப்பதும், ஆட்சியிலுள்ள ஒரு அரசை அகற்றி மற்றொரு ஆட்சியை உருவாக்குவதும் அடிக்கடி நடக்கிறது. இதற்கு பல உதாரணங்களைக் கூறமுடியும்.

 

சட்டப்பிரிவு 356-யை பயன்படுத்த தற்போதைய மோடி அரசால் முடியாது. காரணம், நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் பா.ஜ.க. கூட்டணிக்கு போதுமான பெரும்பான்மை பலம் கிடையாது. அதனால் ஆட்சிக் கலைப்பு என்பதற்கு வாய்ப்பில்லை. அதேசமயம், சட்டப்பிரிவு 355வது பிரிவைப் பயன்படுத்தி ஒரு மாநில அரசை முடக்க முடியும். அதற்கு வலுவான சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இருக்க வேண்டும். தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் இல்லை. சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. இதனை மோடி அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எந்த ரூபத்திலாவது உருவாக்க நினைக்கிறார்கள். சாதி, மத மோதல்களை ஏற்படுத்தவும் திட்டமிடுகிறார்கள்.

 

பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொல்லப்படுகிறார்கள் என்கிற வதந்தி பரப்பப்பட்டதன் பின்னணியும் அதுதான். இன்றைக்கு தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பாகவும் இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கும் தமிழர்களுக்கும் மோதலை உருவாக்குவதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என மனப்பால் குடிக்கிறது ஒன்றிய அரசு. இதுபோன்ற சதித்திட்டங்களை ஒன்றியத்தில் இருப்பவர்கள் உருவாக்குவதாக முதல்வருக்கு தகவல் கிடைத்திருக்கும். அந்த பின்னணியில்தான், தி.மு.க. அரசை அகற்ற சதி நடப்பதாக முதல்வர் குற்றம் சாட்டியிருக்கக் கூடும்” என்று சுட்டிக்காட்டினார். 

 

தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதியிடம் நாம் பேசியபோது, “தி.மு.க. ஆட்சியின் மீது கை வைத்துப் பார்... தமிழ்நாட்டில் பா.ஜ.க.காரன் யாரும் உயிருடன் இருக்க முடியாது என மக்கள் நினைக்கிறார்கள் என்றுதான் நான் பேசினேன். உயிருடன் இருக்க முடியாது என்று நான் சொல்லவில்லை. என் பேச்சை திரித்துப் பரப்பி வருகிறார்கள். பொதுவாக, அமைதிப் பூங்காவாக இருக்கும் திராவிட மாடல் ஆட்சியில் தொழில் வளர்ச்சி தொடங்கி அனைத்து நிலைகளிலும் சிறப்பாக; முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் வெறுப்பரசியலை நடத்தி வருகிறது பா.ஜ.க. தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மாற்றலாம் என தினந்தோறும் ஏதேனும் ஒரு வதந்தியைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

 

‘இந்தியாவுக்கு வழிகாட்ட ஸ்டாலின் முன்வர வேண்டும்; முயற்சிக்க வேண்டும்' என்றெல்லாம் இந்தியத் தலைவர்கள் பலரும் சொல்லி வருவதை பா.ஜ.க.வினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகிறார்கள் என்கிற வதந்தியையும் பா.ஜ.க.தான் பரப்பியது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க. அண்ணாமலை, "ராணுவத்தினரின் கையில் துப்பாக்கி இருக்கு. அதில் குண்டு இருக்கிறது. ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார். நீங்க சுட்டுத் தள்ளிட்டு வந்துக்கிட்டே இருங்க. மிச்சத்தை பா.ஜ.க. பார்த்துக்கொள்ளும்'' என வன்முறையையும் தீவிரவாதத்தையும் தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். அதேபோல, சாதி, மதப் பிரிவினை அரசியலைத் தூண்டி சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தவும் முயற்சித்து வருகிறார்கள்.

 

இப்படிப்பட்ட சம்பவங்களால் பதற்றத்தை உருவாக்கி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதே பா.ஜ.க.வின் நயவஞ்சகத் திட்டம். அதன் மூலம் தி.மு.க. அரசை முடக்க அவர்கள் சதி செய்வதாகவே தெரிகிறது. அதன் பின்னணிகளை அறிந்ததால்தான் முதல்வர் ஸ்டாலின், தி.மு.க. அரசை அகற்ற சதி நடக்கிறது எனச் சொன்னார்” என்று விவரித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது