Skip to main content

“ஓடி ஒளியக் கூடாது; நின்னு கேட்டிருக்கணும்” - இபிஎஸ் கேள்விக்கு முதல்வர் பதில்

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

CM reply to AIADMK question regarding women police issue in Assembly

 

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது"  என்று ஆரம்பித்து, பெண் காவலர் ஒருவருக்கு ஏற்பட்ட பாலியல் விவகாரம் உள்ளிட்ட சம்பவங்களைச் சுட்டிக்காட்டிக் கடுமையாகப் பேசத் தொடங்கினார்.

 

அப்போது எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "செய்தித்தாள்களில் வந்த செய்திகளை வைத்து எதிர்க்கட்சி தலைவர் பேசுகிறார். இப்படி அவர் பேசக்கூடாது. ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே பேச வேண்டும். அனுமதி பெறாத விசயங்களைப் பற்றி பேசுவது மரபு அல்ல. சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசினால், அதிமுக ஆட்சியில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும் ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அந்தப் பட்டியலை வெளியிட எங்களையும் அனுமதிக்க வேண்டும். அவரை பேச அனுமதியுங்கள். நான் ஓடப்போவதில்லை; அவரை பேச அனுமதியுங்கள்" என்று சபாநாயகரிடம் வலியுறுத்தினார். ஆனாலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிக்கு தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கத்தை நான் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். ஓடி ஒளியக் கூடாது. இருந்து கேட்டிருக்கணும். குற்றச்சாட்டை சொல்லிட்டு, பதிலை இருந்து கேட்க வேண்டும். இதனால் தான் சொன்னேன். நான் ஓடி ஒளியமாட்டேன் எனக் கூறினேன். பதில் சொல்லுவதற்கு தயாராக இருக்கிறேன் என்றும் சொன்னேன்.

 

31-12-2022 அன்று இரவு 10.45 மணிக்கு பெண் காவலர் R-5 விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த உடனே எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 353, 354 மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 4ன் கீழும் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கு புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் மற்றும் சாட்சியங்களை விசாரணை செய்து சிசிடிவி காட்சிகளும் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து அச்சம்பவத்தில் ஈடுபட்ட பிரவீன்குமார், ஏகாம்பரம் ஆகியோர் 03-01-2023 அன்று கைது செய்யப்பட்டு அடுத்த நாளே நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

 

புகார் கொடுத்த அன்றே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து புலன் விசாரணை செய்து 72 மணி நேரத்தில் கைது செய்து எந்த வழக்கிலாவது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்ததுண்டா என்ற கேள்வியைத் தான் நான் கேட்கின்றேன். எஸ்.பி அந்தஸ்தில் உள்ள இரு பெண் காவல் அதிகாரிகளை அலைக்கழித்த ஆட்சிதான் அதிமுக ஆட்சி. ஆகவே இந்த அரசைப் பொறுத்தவரை பெண்களுக்கு எதிராக; பெண்காவலர்களுக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்