
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு 2026இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் அதே கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது.
அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. இது தவிர இதர கட்சிகளான தேமுதிக, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போட்டியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாக களமிறங்கியுள்ளார். அதனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தீவிர முனைப்பு காட்டி வருகிறார். இதனால், பல்வேறு கட்டமாக திமுக நிர்வாகிகளைச் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ‘உடன்பிறப்பே வா’ என்ற பெயரில் தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இன்று (21-06-25) கிருஷ்ணகிரி, சங்கராபுரம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒன் டூ ஒன் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கட்சிப் பொறுப்பில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்றும் உழைப்பவர்களுக்கு அதற்கேற்ப அதிகாரம் கட்சியில் நிச்சயம் கிடைக்கும் என்றும் அரசினுடைய மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் ஒற்றுமையுடன் பணியாற்றி 200 தொகுதிகளின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.