CM MK Stalin says BJP  upper class fascist face 

பா.ஜ.க.வின் உயர்வர்க்க பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது என திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ‘தமிழ்நாட்டு மக்களின் குரலை வீறுகொண்ட வீரர்களாக நாடாளுமன்றத்தில் முழங்கிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்’ என குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் (20.12.2024) முடிவுற்றுள்ளது. இக்கூட்டத் தொடரில் வீறுகொண்ட வீரர்களாக திமுக நாடளுமன்ற உறுப்பினர்கள் முழங்கி இருக்கிறார்கள்.

Advertisment

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளைப் பார்த்து நாடே வியந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நலனுக்காக குரல் கொடுப்பது, மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பி அவையின் கவனத்தை ஈர்ப்பது ஆகிய இரண்டையும் வெற்றிகரமாகச் செய்து காட்டி இருக்கிறார்கள். மற்ற மாநில எம்.பி.க்களுக்கு முன்னோடிகளாக திமுக எம்.பி.க்கள் செயல்படுவதைப் பார்த்து, நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் தலைவராக நான் எண்ணி எண்ணி மகிழ்கிறேன். தி.மு.க. எம்.பி.க்கள் என்ன பேசுகிறார்கள், நாட்டை உலுக்கும் முக்கியப் பிரச்சினைகளில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை இன்று நாடே உன்னிப்பாக கவனிக்கும் நிலைக்கு இந்த திராவிடப் பேரியக்கம் வளர்ந்திருப்பதை நினைத்தும் பெருமையாக இருக்கிறது.

Advertisment

அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் என, தான் பொறுப்பேற்று பதில் சொல்லியே ஆகவேண்டிய அனைத்திலும் கனத்த மவுனம் காக்கும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வினரால் ஜனநாயகம் படாத பாடு பட்டபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவையை நடத்த விரும்புவதை விட, அவையை முடக்க வேண்டும், அரசின் தோல்விகள் குறித்த எந்த விவாதமும் நடைபெற்று விடக்கூடாது என்பதையே மனதில் வைத்து பா.ஜ.க. எம்.பி.க்கள் செயல்பட்டதை காணமுடிந்தது. ஆக்கப்பூர்வமான விவாதம் செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பது நாடாளுமன்றத்தைப் பொறுத்தமட்டில் அரிதான நிகழ்வாக பா.ஜ.க. ஆட்சியில் மாறி விட்டதை எண்ணி ஒரு மிகப்பெரிய ஜனநாயக இயக்கமாம் தி.மு.க. கவலை கொள்கிறது.

CM MK Stalin says BJP  upper class fascist face 

குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மக்களவையானது 54.5 விழுக்காடும், மாநிலங்களவை 40 விழுக்காடும்தான் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைவிட வேதனையான செய்தி இருக்க முடியுமா?. நமது நாட்டின் பெருமைமிக்க அரசியல் சட்டத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின்போது, பா.ஜ.க. ஆட்சியின் கையில் ‘நாடாளுமன்ற ஜனநாயகம்’ எப்படி பிய்த்து எறியப்பட்டுள்ளது என்பதற்கு இந்த குளிர்காலக் கூட்டத்தொடரே சாட்சி. அரசியல் சட்டத்தின் 75 ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது, அச்சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சரே அவதூறுசெய்து, இழிவுபடுத்திப் பேசுவது பா.ஜ.க.வின் உயர்வர்க்க பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது.

Advertisment

ஒருபுறம் அரசியல் சட்டத்திற்கு விழா, இன்னொரு புறம் அதை உருவாக்கித்தந்த அண்ணலுக்கு அவதூறு. இதுதான் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் ஆகும். இவ்வளவு களேபரத்திலும், திமுக மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்ற தவறவில்லை என்பது, இவர்கள் கலைஞர் வளர்த்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்ட திராவிட இயக்க ஆற்றலாளர்கள் என்பதை அரங்கேற்றியுள்ளது. தமிழ்நாடு நலன் சார்ந்த - நம் நாட்டு நலன் சார்ந்த பேச்சுக்களை நான் மட்டுமல்ல நாடே கைதட்டி இப்படியல்லவா நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் எனப் பாராட்டி வருகிறது.

CM MK Stalin says BJP  upper class fascist face 

தமிழ்நாட்டின் உரிமைகளை, எந்த மாநில எம்.பி.க்களைக் காட்டிலும், தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய திமுக எம்.பி.க்கள் எழுப்பியது எழுச்சியூட்டியது. அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்து வரும் தி.மு.க.வின் தலைவர் என்ற நிலையில் எம்.பி.க்களின் சாதனைகளை மார்தட்டி அறிவித்துக்கொள்ள வேண்டியது முக்கியம் என்றே கருதுகிறேன். ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் குரலாகக் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகள், எழுப்பிய மாநில உரிமை முழக்கங்கள், ஜனநாயகத்தைப் பாழ்படுத்தும் ‘ஒரே நாடு ஒரே தேர்தலை’ ஆணித்தரமாக எதிர்த்த நாடாளுமன்றக் குரல்கள் எல்லாம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் செவிகளில் உரக்கவே விழுந்திருக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

அதன் மூலம் மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களை ஓரவஞ்சனையுடன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்த முடியாது என்ற செய்தியை அழுத்தம் திருத்தமாகக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார்கள் எம்.பி.க்கள். இனியும் மத்திய அரசு திருந்தவில்லை என்றால் தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லையென்றால் தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி” எனத் தெரிவித்துள்ளார்.