Skip to main content

“சர்வாதிகார ஆட்சியை பாஜகவினர் நடத்திக் கொண்டிருக்கின்றனர்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

cm mk stalin says bjp central government stand

 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இஎஸ்ஐ மருத்துவமனைகளின் இயக்குநர் டாக்டர் ஜெய.இராஜமூர்த்தி மகன் இரா.சாரங்கராஜன் (எ) சஞ்சய் - ச.கீர்த்தனா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

 

அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இன்றைக்கு ஒருவர் வள்ளலார் பற்றி புலம்பிக்கொண்டு இருக்கிறார். அவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். இன்று நாடு சென்று கொண்டிருக்கிற நிலைகள் எல்லாம் தெரியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எந்த ஒரு நல்லாட்சியை உருவாக்கித் தர துணைநின்றீர்களோ, அந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக எழுச்சியோடு நடைபெற்று கொண்டிருக்கிறது.

 

தேர்தல் நேரத்தில் வழங்கிய உறுதிமொழிகள் மற்றும் வாக்குறுதிகளை எல்லாம் எந்த அளவிற்கு தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதோ அதுபோல் இந்திய நாட்டிற்கு ஒரு ஆட்சி தேவை. காரணம் இன்றைக்கு மத்தியில் இருக்கக் கூடிய பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களையும் நிறைவேற்ற முன்வரவில்லை. அதற்கு நேர்மாறாக மக்கள் விரோதப் போக்கோடு மதத்தை, சனாதனத்தை மக்களிடத்தில் திணித்து ஒரு சர்வாதிகார ஆட்சியை பாஜகவினர் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

 

அண்மையில் கூட பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறார்கள். பொது சிவில் சட்டம் என்று நாட்டில் ஏற்கனவே இருக்கிற சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களை நீக்கிவிட்டு பாஜகவின் கொள்கைகளை எதிர்க்கக் கூடியவர்களை எல்லாம் பழிவாங்கும் நோக்கத்தில் கொண்டுவந்து மக்களுக்கு துன்பங்களை, கொடுமைகளை கொடுக்க வேண்டும் என்கிற தீய சக்தியாக பாஜக செய்து கொண்டிருக்கிற காரியங்களை எல்லாம் பார்த்து கொண்டிருக்கிறோம். ஏற்கனவே பாஜகவை எதிர்க்கக் கூடிய அரசியல்வாதிகளை எல்லாம் சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை எல்லாம் வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிற ஆட்சியாக மத்திய பாஜக ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.

 

திமுக குடும்ப கட்சியாக, இது எங்கள் குடும்பத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சி என்று இங்கு சொன்னார்கள். இதனைக் கேட்டால் பிரதமருக்கு கோபம் கூட வந்துவிடும். பிரதமர் மத்தியப்பிரதேசத்தில் பேசியபோது கூட திமுக பற்றிய நினைப்பு வந்துள்ளது. அப்போது அவர் பேசுகையில் திமுகவினர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக கட்சி நடத்துகிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அடுத்த நாளே நான் இது குறித்து பேசுகையில் திமுக குடும்ப கட்சி தான். அண்ணாவால் உருவாக்கப்பட்ட, கலைஞரால் வளர்க்கப்பட்ட திமுக குடும்ப கட்சி தான். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாடே திமுகவின் கட்சிதான். தமிழ்நாடே கலைஞரின் குடும்பம் தான் என்று சொல்லி இருக்கிறேன்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.