
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுகவில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் இந்த குழு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் திமுக பொதுக்குழுக் கூட்டம் மதுரையில் நாளை (01.06.2025) நடைபெறுகிறது.
இதற்காக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (31.05.2025) மதியம் மதுரைக்குச் சென்றடைந்தார். அதன்படி நிலையத்திற்கு வந்திருந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதாவது விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மூத்த அமைச்சர் துரைமுருகன் அமைச்சர்கள் கே.கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு மற்றும் உட்பட பல்வேறு வரவேற்பு அளித்தனர். அதோடு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தின் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பளித்தனர். அதனைத் தொடர்ந்து இன்று மாலை நடைபெறும் மு.க. முத்து சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். மேலும் மதுரையிலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்திற்குச் சாலையில் ரோட் ஷோ நடத்த உள்ளார். இதற்காக மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ரோடு ஷோவின் போது 13 இடங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலினை வரவேற்கத் தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளனர்.