/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-covai-pm-art.jpg)
ஈரோடு மாவட்டத்தில் இன்று (20.12.2024) நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தார். அதோடு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து அண்மையில் மறைந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா. மோகனின் கோயம்புத்தூர் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா. மோகன் மறைவெய்தினார். அந்த நேரத்தில் நான் அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தேன். திமுகவில் சாதாரண நகரக் கழக செயலாளராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி, திமுகவிற்குப் பெருமை சேர்த்தவர். அவரது மறைவு என்பது கோவை மாவட்டத்திற்கு மட்டுமல்ல, திமுகவிற்கும் மாபெரும் இழப்பாக உள்ளது. எனவே, அவர் இறந்த துயரத்தில் இருக்கக்கூடிய அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவருக்கு ஆறுதல் சொல்வதற்காக நான் இங்கு வந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்த வட்டாரத்தில் இருக்கும் திமுகவினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அப்போது செய்தியாளர்,’ ‘ஈரோடு கள ஆய்விற்குச் சென்று வந்துள்ளீர்கள். மக்கள் என்ன சொன்னார்கள். அது பற்றிக் கூறுங்கள்...” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முதலமைச்சர், “ நேற்றைய தினம் ஈரோட்டில் கள ஆய்வு நடத்தினேன். கள ஆய்வினை பொறுத்தவரையில், இன்னும் வேகமாக உற்சாகத்தோடு பணியாற்றி வருகிறார்கள். வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 என்ற இலக்கை நாங்கள் வைத்திருக்கிறோம். ஈரோடு கள ஆய்வில் நான் உணர்ந்த உணர்வு என்ன என்று கேட்டால், 200 தொகுதிகளையும் தாண்டிவிடுமோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து, ‘ராகுல் காந்தியின் மீது வழக்கு பதிவிட்டிருப்பது தொடர்பாக....’, அதற்கு முதலமைச்சர், “அதை சட்டப்படியாகச் சந்திப்பார்” எனப் பதிலளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வசமாகுமா? என்ற கேள்விக்கு, “தி.மு.க. கூட்டணி வசமாகும். ஏற்கனவே இந்தியா கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகிக்கிறது. எனவே இந்தியா கூட்டணியின் வசமாகும்” எனத் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, “அதை முறையாக அவர்களுடன் கலந்து பேசி முடிவெடுத்து அறிவிப்போம்.” எனக் கூறினார். ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றிய கேள்விக்கு, “அதைப் பற்றிப் பல முறை சொல்லியிருக்கிறேன். அது கொடுமையான ஒரு முடிவு, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளக்கூடிய மோசமான செயலாகும்” எனத் தெரிவித்தார். அமித்ஷா - அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக அடுத்து எந்த மாதிரி அணுகுமுறை உள்ளது. தொடர் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், எந்த மாதிரியான எதிர்ப்புகள் தெரிவிக்கப்போகிறீர்கள்? அது பற்றி... “இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து அது குறித்து அறிவிப்போம்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)