Skip to main content

''முதல்வரின் கனவு பகல் கனவாகும்'' -முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

Published on 30/07/2023 | Edited on 30/07/2023

 

 "The Chief Minister's dream is a daydream" - Former minister Sellur Raju's speech

 

தமிழக முதல்வரின் கனவு பகல் கனவாகும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 

நெல்லையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், ''மாநாட்டின் மூலம் மிகப்பெரிய வெற்றியை, தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை நாம் உருவாக்க இருக்கிறோம். அடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் நாடும் நமதே, நாற்பதும் நமதே, தமிழ் நாடும் நமதே என்பதை நிலைநிறுத்தப் போகிறோம். எப்படி வெள்ளிவிழா மாநாட்டிற்கு பிறகு அதிமுகவில் ஒரு மாற்றம் ஏற்பட்டதோ அதேபோன்ற ஒரு மாற்றத்தை பொன்விழா மாநாடு நிகழ்த்திக் காட்டும்.

 

ஸ்டாலின் சொல்கிறார் 'திராவிட விடுதலை, திராவிட மாடல் ஆட்சி இங்கே மட்டுமல்ல இந்தியா முழுவதும் தொடரனும் அதுதான் என்னுடைய பேராசை. இதை நாம் நிகழ்த்தி காட்ட வேண்டும்' என்று நேற்று பேசியுள்ளார். நாம பட்ட துன்பம் போதாதா... இந்த இரண்டு ஆண்டுகளில் இந்த தமிழக மக்கள் படுகின்ற துன்பம் போதாதாம். விடியல் தருவோம் என்று இருட்டை கொடுத்து தன் குடும்பத்திற்கு மட்டும் விடியலை கொடுத்திருக்கின்ற முதல்வர் ஸ்டாலின் அவர்களே தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையே இருட்டாக்க பார்க்க நினைக்கும் உங்களுடைய கனவு பகல் கனவாகும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். உங்களுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது. உங்களுடைய ஆட்சி நடக்கும் போதுதான் நம்முடைய ரத்த சொந்தங்கள் இலங்கையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அங்கு இருக்கின்ற தங்கைமார்கள், சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அதெல்லாம் உங்களுடைய ஆட்சிக்கு தெரியவில்லையா? உங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிமுகவின் படை புறப்பட்டு விட்டது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்