Skip to main content

வழக்கை மறைத்து தேர்தல் பிரச்சாரத்தில் பொய் சொன்ன முதல்வர் பழனிசாமி

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

திருவண்ணாமலை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, மார்ச் 28 மற்றும் 29-ம் தேதிகளில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

 

Chief Minister who lied in the election campaign hiding the case


அதன்படி மார்ச் 28-ம் தேதி இரவு விதிகளை மீறி நகரத்தின் மையத்தில் மேடையமைத்து பொதுக்கூட்டம் நடத்தியது அதிமுக. இதில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி, அக்ரி.கிருஷ்ணமூர்த்தி குற்றவாளி என திமுக குற்றம்சாட்டுகிறது. அவர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் விடுதலையானவர். 2ஜீ வழக்கு மேல்முறையீட்டில் உள்ளது. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, நல்லவர், மக்களுக்கு நல்லது செய்வார் என்றவர், எங்கள் கட்சி தலைவி ஜெயலலிதா இறப்புக்கு நீதி கேட்கிறேன் என கிளம்பியுள்ளார் ஸ்டாலின். எங்கள் கட்சி விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், உங்கள் வேலையை பாருங்கள் என்றார்.


வேட்பாளர் நல்லவர், அவர் விடுதலை செய்யப்பட்டார் என்று சொல்வதை அதிமுகவினர் பலர், ஒரு முதல்வர் பொய் சொல்லலாமா என புலம்புகின்றனர். இதுப்பற்றி நாம் பல்வேறு தரப்பினரிடம் பேசியபோது, கடந்த 2011-2016 காலக்கட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சராக இருந்தபோது, திருநெல்வேலியை சேர்ந்த வேளாண்மை அதிகாரி முத்துக்குமாரசாமியிடம், புதியதாக வேலைக்கு சேருபவர்களிடம் ‘லஞ்சம் வாங்கி தா’ என நெருக்கடி தந்ததால் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இது அப்போது பெரும் பிரச்சனையானதும், வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது, அமைச்சர் பதவியில் இருந்து அக்ரி.கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார். பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிணையில் சிறையில் இருந்து வெளியில் வந்தாலும், கட்சியில் இருந்து ஓரம் கட்டி வைக்கப்பட்டார். 

 


பிணையில் வெளியே வந்தவர், முத்துக்குமாரசாமி இறப்புக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என்னை வழக்கில் இருந்து விடுவியுங்கள் எனச்சொல்லி வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்து அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், தமிழகரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க, அந்த வழக்கில் இருந்து விடுதலையாகிவிட்டார் என முதல்வரே சொல்வது வேதனையாக இருக்கிறது, இவர் ஒரு அரசு அதிகாரியை தற்கொலைக்கு தூண்டிய விவகாரத்தை எதிர்கட்சிகள் மட்டும் பேசவில்லை, மக்களும் பேசுகிறார்கள், இதனை உளவுத்துறை மூலம் அறிந்தே நல்லவர் என சர்டிஃபிகேட் தருகிறார் என்றார்கள்.

 

கடந்த மாதம் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமண வரவேற்புக்கு முதல்வர் எடப்பாடி வந்தபோது, குற்றவாளியின் இல்ல திருமணத்துக்கு வரக்கூடாது என கலசப்பாக்கம் அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜன் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து முதல்வருக்கு பெட்டிஷன் அனுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், தமிழகரசே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதுவும் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது செய்யப்பட்டது. அப்படியொரு முக்கிய வழக்கை மறைத்து பொதுமக்கள் முன்னால், முதல்வர் பொய் பேசுவது சரியா?. அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, தமிழகரசு என்ன முறையில் நடந்துகொள்ளும் என்பது இதன்மூலம் தெரிகிறது என அரசு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் நொந்துபோய் புலம்புகின்றனர்.


29-ம் தேதி கீழ்பென்னாத்தூர் உட்பட விழுப்புரத்துக்கு பிரச்சாரத்துக்கு சென்றார். திருவண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தபோது, அதிமுக வேட்பாளர் குற்றமற்றவர் என்கிற பிரச்சாரத்தையே திரும்ப திரும்ப பொய்யை உதிர்த்தார் எடப்பாடி பழனிசாமி.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.