Skip to main content

“உச்ச நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 16/06/2025 | Edited on 16/06/2025

 

Chief Minister M.K. Stalin's speech at marriage event in thanjavur

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மணமக்களை வாழ்த்தி பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது, “1967க்கு முன் சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்று இருந்தது. ஆனால், அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்தப் பிறகு சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லும் என தீர்மானம் நிறைவேற்றினார். இங்கு வந்திருக்கும் நீதியரசர் தமிழில் பேசியதை நான் ஆச்சரியத்தோடு பார்த்தேன். பல ஆண்டு காலமாக உச்ச நீதிமன்றத்தினுடைய நீதியரசர் பலர் தமிழ்நாட்டிற்கு வந்த போது உச்ச நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழில் இருக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். கலைஞர் முதலமைச்சராக இருந்த போது சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்தார். ஆனால் இன்றைக்கு நீதி வழங்கக்கூடிய அந்த தீர்ப்பு தமிழில் வரக்கூடிய சூழ்நிலை பெற்றிருக்கிறது. அதற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம், பெருமைப்படுகிறோம். 

ஆனால், உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் வழக்காடுகிற நேரத்தில் தமிழிலே வாதாடுகிற சூழ்நிலையை உருவாக்கி தர வேண்டும் என்று நாங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து கொண்டிருக்கிறோம். அந்த கோரிக்கை நிறைவேறுவதற்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும் என்று இங்கு வந்திருக்கும் நீதியரசரிடம் அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இன்றைக்கு தமிழன் என்று நாம் பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்த தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்று தந்தவர் கலைஞர் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அதே போல், உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள் என்ற அந்த வேண்டுகோளையும் மணமக்களுக்கு வைக்க விரும்புகிறேன். 

இப்போது குழந்தைகள் அதிகம் பெற வேண்டும் என்ற நிலை இன்றைக்கு உருவாகி இருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் தான் இன்றைக்கு நாடாளுமன்றத்தை பிரித்து கொள்கிறார்கள். நாம் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட காரணத்தால் இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு ஒரு ஆபத்து வந்திருக்கிறது. அது என்னவென்றால், நாடாளுமன்றத்தை குறைக்கக் கூடிய சூழ்நிலை வந்திருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் நாமும் ஏன் அதை குறைக்க வேண்டும், அதிகப்படுத்திக் கொண்டு நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைப் பெறலாம் என்ற சூழ்நிலை வந்திருக்கிறது” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்