
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இரண்டு நாள் பயணமாக சேலத்திற்கு இன்று (ஜூன் 11, 2025) மாலை வருகிறார்.
சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் கோவைக்குச் செல்லும் அவர், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ செல்வராஜின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்கிறார். அதையடுத்து, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இன்று மாலை 5 மணியளவில் சேலம் வருகை தரும் முதல்வருக்கு, பவானி - மேட்டூர் எல்லையான பெரும்பள்ளம் பகுதியில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். அங்கிருந்து நவப்பட்டியில் உள்ள நீர்வளத்துறை ஆய்வு மாளிகை வரை 11 கி.மீ. தூரம் வாகனத்தில் பயணித்தபடியே பொதுமக்களை (ரோடு ஷோ) சந்தித்து, குறைகளை கேட்டறிகிறார்.
பின்னர், நவப்பட்டியில் உள்ள திருமலை வாசவி திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுகிறார். இரவு, மேட்டூரில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஆய்வு மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். இத்துடன் இன்றைய நாள் நிகழ்வுகள் நிறைவு பெறுகின்றன.
நாளை (ஜூன் 12) காலை 9.30 மணியளவில், காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, சேலம் இரும்பாலை அருகே உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இந்நிகழ்ச்சியில், பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், சிறப்புரையாற்றுகிறார்.
இதைத் தொடர்ந்து, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வரும் முதல்வர் மதிய உணவு எடுத்துக் கொள்கிறார். சிறிது ஓய்வுக்குப் பிறகு, அஸ்தம்பட்டியில் இருந்து புறப்பட்டு காமலாபுரம் விமான நிலையத்திற்குச் செல்கிறார். அங்கிருந்து மாலை 4.45 விமானம் மூலம் முதல்வர் சென்னைக்குச் செல்கிறார்.
முதல்வருக்கு விமர்சையாக வரவேற்பு அளிக்கவும், அரசு நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் அமைச்சர்கள் எ.வ.வேலு, வழக்கறிஞர் ராஜேந்திரன், எம்.பி.,க்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஆகியோர் மேற்பார்வையில் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.