
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டம் ரூ.80 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட நிலையில், அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21-06-25) பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த சட்டசபைக் கூட்டத்தொடரின் போது, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதனை கெளரவிக்கும் விதமாக மாற்றுத்திறனாளிகள் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய முதல்வர், “சென்னை வள்ளுவர் கோட்டத்தை புணரமைத்து புதுப்பொலிவாக்கியுள்ளோம். மாற்றுத்திறனாளிகளின் அன்புக்காக இந்த பாராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். எனது பிறந்தநாளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பார்ப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். சமுத்துவம், சமதர்மம், சமூகநீதி, சகோதரத்துவத்தை காக்கக் கூடிய அரசு திராவிட மாடல் அரசு. எல்லோரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. எல்லோருக்கும் சமத்துவம் கிடைப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. கலைஞர் வழியில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்ட தொடர்ந்து செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில், உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு மாற்றுத்திறனாளி இடம்பெறுவார் என்ற மாபெரும் சமூகநீதி உரிமையை சட்டமாக்கி இருக்கிறோம். இதன் மூலம், 13,257 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவார்கள். தற்போது உடனடியாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் 650 மாற்றுத்திறனாளிகளும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2984 மாற்றுத்திறனாளிகளும் நியமிக்கப்படுவார்கள். மாவட்ட வாரியாக ஜூலை 1 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்படும். மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலே குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குழுவில் இருக்க உறுப்பினர் ஒருவர் இடம் பெற்றிருப்பார். நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் மன்ற கூட்டங்களில் பங்கேற்கலாம். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும்” என்று பேசினார்.