இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத் தளத்தில் ‘பதில் சொல்லுங்க மோடி’ எனக் குறிப்பிட்டு பல்வேறு கேள்விகளை அடுக்கியுள்ளார். அதில், “பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்துக்கு வருவது போல், தேர்தல் காலங்களில் தமிழ்நாட்டில் வட்டமடிக்கும் பிரதமர் மோடி அவர்களே... குஜராத் மாடல் - சவுக்கிதார் வேடங்கள் போலி என அம்பலமானதால், கேரண்டி கார்டுடன் மக்களவைத் தேர்தலுக்கு வந்திருக்கும் பிரதமர் மோடி அவர்களே... இதோ இந்த கேரண்டிகளைத் தருவீர்களா?. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீடு முறையாகக் கடைபிடிக்கப்படும். தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு. ஒருபோதும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது. மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றம்; கல்விக்கடன்கள் ரத்து.
ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் ரூ.400. வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம். தாறுமாறாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்பேன். செஸ், சர் சார்ஜ் என்ற வரிக் கொள்ளை அறவே நீக்கம். அமலாக்கத்துறை - வருமான வரித்துறை - சி.பி.ஐ ஆகியவை சுதந்திரமாகச் செயல்படும். மாநிலங்களை வஞ்சிக்காத நியாயமான நிதிப் பகிர்வு தருவேன். வணிகர்களையும் சிறு குறு தொழில்களையும் வதைக்கும் ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம். கும்பல் வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன். வியாபம் முதல் தேர்தல் பத்திரங்கள் வரை பா.ஜ.க.வின் ஊழல்கள் குறித்த வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடுவேன்.
இல்லையென்றால் உங்கள் கேரண்டி என்பது, ஊழல் கறை படிந்தவர்களுக்குக் காவிக்கறை பூசும் மேட் இன் பிஜேபி (Made in BJP) வாஷிங் மெஷினுக்கு மட்டுமே என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகும். பதில் சொல்லுங்க மோடி” எனக் குறிப்பிட்டுள்ளார்.