ADVERTISEMENT

“எந்த மாவட்டத்திற்கும் செய்யாததை முதலமைச்சர் நம் மாவட்டத்திற்கு செய்திருக்கிறார்...” - அமைச்சர் ஐ.பெரியசாமி

09:44 AM May 16, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாநகரில் உள்ள நாகல் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தலைமை திமுக பேச்சாளர் வெற்றி கொண்டான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்த ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “திண்டுக்கல் மாநகருக்கு கடந்த கால திமுக ஆட்சியின் போது பணிகளைச் செய்திருக்கிறோம். அப்போது நான் அமைச்சராக இருந்தபோது இந்த பகுதியிலுள்ள மேம்பாலத்தை தலைவர் கலைஞர் தான் திறந்து வைத்தார். அதுபோல் திருச்சி மேம்பாலத்தையும் தலைவர் ஆட்சியின் போது கட்டி திறக்கப்பட்டது. அதுபோல் தற்போது கிருஷ்ணாபுரத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை கூடிய விரைவில் முதல்வர் ஸ்டாலின் திறக்க இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நகரில் எங்கு பார்த்தாலும் தார் சாலைகள், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் உள்பட எண்ணற்ற பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம்.

எந்த மாவட்டத்திற்கும் செய்யாததை முதலமைச்சர் ஸ்டாலின் நம் மாவட்டத்திற்கு செய்திருக்கிறார். தமிழகத்திலேயே நம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் ஐந்து கல்லூரிகளை கொடுத்திருக்கிறார். இதன் மூலம் ஏழை மாணவர்கள் பயனடைய இருக்கிறார்கள். இப்படி நம் மாவட்டத்திற்கு 3000 கோடியில் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதுபோல் திண்டுக்கல் நகருக்கு மட்டும் மேலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்த ரூ. 90 கோடி ஒதுக்கி இருக்கிறார். அதற்கான பணிகளும் தொடங்க இருக்கிறது.


மாநகர மேயர் இளம்மதி, துணை மேயர் ராஜப்பா தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் ரூ. 285 கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. ரூ. 5000 கோடி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. கோடான கோடி பெண்கள் இலவசமாக பஸ்ஸில் பயணம் செய்து இருக்கிறார்கள். தலைவர் ஆட்சியின்போது ஒரு பைசாகூட வாங்காமல் வேலைவாய்ப்பு வழங்கிய ஒரே மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் தான். அதே நிலைதான் தற்போது வரப்போகிறது எல்லாத் துறைகளிலும் உள்ள வேலைகள் வீடு தேடி கொடுக்கப்போகிற ஆட்சி தான் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி.


நான் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருக்கக்கூடிய பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை பட்டா கொடுத்தேன். அதுபோல் திண்டுக்கல்லிலும் கொடுத்திருக்கிறேன். தற்பொழுதும் கூட திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் இருக்கக் கூடிய பத்திரிகையாளர்கள் வீட்டு மனை பட்டா கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கும் கூடிய விரைவில் முதல்வரிடம் பேசி வீட்டு மனைப் பட்டா கொடுக்க வழி செய்யப்படும். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழகம் என்ன பாடுபட்டது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், எல்லாத் துறைகளிலும் தவறு செய்திருக்கிறார்கள். அதை கூடிய விரைவில் உணர்வார்கள். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறோம். இது போல் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தலைவர் சொன்ன அனைத்து திட்டங்களையும் கூடிய விரைவில் கொண்டு வருவோம்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT