Skip to main content

ஒரு வாரச் செலவுக்காக ப.சிதம்பரம் பெறும் பணம் எவ்வளவு தெரியுமா?

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

கடந்த மாதம் 21-ம் தேதி ப.சிதம்பரம் சிபிஐ யால் கைது செய்யப்பட்டார். 15 நாட்கள் சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரத்தை 14 நாட்கள் திகார் சிறையில் வைக்க கடந்த 5 ஆம் தேதி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. கார்த்திக் சிதம்பரம் இருந்த அதே அறை எண்.7ல் சிதம்பரம் சிறை வைக்கப்பட்டார்.  சிறையில்  தன் மனைவி நளினி கொடுத்த கம்பராமாயணத்தையும், சில ஆங்கில நூல்களையும் ப.சிதம்பரம் படித்துக்கொண்டிருக்கிறார் என்று கூறுகின்றனர். அதோடு வெளியில் என்ன நடக்கிறது என்பதை அடிக்கடி விசாரித்து தெரிந்துகொள்கிறாராம். இந்த நிலையில் திஹார் ஜெயிலில் வாரம் ரூ.1500 மட்டும் தனது குடும்பத்தினர்களிடம் இருந்து செலவுக்கு சிதம்பரம் பெற்று வருவதாக கூறுகின்றனர். 
 

p.chidambaram



அதாவது, சிறையில் கொடுக்கும் உணவுகளையே ப.சிதம்பரம் சாப்பிட்டு வந்தாலும், சிறையில் பயன்படுத்தும் டூத் பிரஷ், ஷேவிங் கிரீம், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை வாங்க ப.சிதம்பரம் வாரம்தோறும் 1,500 ரூபாயைத் தனது குடும்பத்தினரிடம் இருந்து பெற்று வருவதாக திஹார் ஜெயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து திகார் சிறைக்காவலர்கள் கூறும் போது, சிறை கைதிகள் செலவுக்காக தனது குடும்பத்தினரிடம் வாரம் 1500 பெற்று கொள்ளமுடியும். அதை சிறைக் கைதிகள் நல நிதியில் சேர்க்கப்பட்டு அதை வங்கி போல் டெபாசிட் செய்துகொள்ள முடியும். இதற்காகத் தனி கார்டு கொடுக்கப்படும். அந்த கார்டை பயன்படுத்தி சிறையில் உள்ள கேன்டீன்களில் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளனர். இந்த விதிமுறையே சிதம்பரத்திடமுடம் கடைப்பிடிக்கிறோம் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Insulin for Arvind Kejriwal in jail

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு ஒன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவர் அளித்த மனு விசாரணைக்கு வந்த போது, ‘தான் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன் என்றும், தனது ரத்த அளவுகளை மருத்துவரைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும்’ கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த மனு கடந்த 18 ஆம் தேதி (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோகப் ஹொசெயின், “சர்க்கரை நோய் அதிகம் உள்ளதாகக் கூறும் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் மாம்பழம் சாப்பிடுவது, இனிப்புகள் சாப்பிடுவது, சர்க்கரையுடன் டீ சாப்பிடுவது உள்ளிட்டவைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார். இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கான ஒரு களமாக இதைப் பயன்படுத்த கெஜ்ரிவால் விரும்புகிறார்” என்று வாதாடினார்.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் விவேக் ஜெயின், ‘அமலாக்கத்துறை வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் இது போன்றத் தகவல் பரவ வேண்டும் என்பதற்காகவே இதைச் சுமத்துகிறது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரிலேயே அவர் உணவுகளை எடுத்து வருகிறார்’ என்று கூறினார். இந்நிலையில் திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டுள்ளது. உடலில் சர்க்கரை அளவு கூடியதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்படி குறைந்த அளவு இன்சுலின் மருந்துகள் இரண்டு யூனிட்கள் வழங்கப்பட்டது என திகார் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Insulin for Arvind Kejriwal in jail

இது குறித்து ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறுகையில், “நாங்கள் கோரிய இன்சுலின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்துள்ளது. கடந்த 23 நாட்களாக அவருக்கு இன்சுலின் ஏன் கொடுக்கப்படவில்லை?. டெல்லி திகார் சிறை அரவிந்த் கெஜ்ரிவாலின் சித்திரவதை அறையாக மாறியுள்ளது. 24 மணி நேரமும் அவர் பிரதமர் அலுவலகம் மற்றும் துணை நிலை ஆளுநரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

சிறையில் உள்ள கவிதாவைக் கைது செய்த சிபிஐ!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
CBI arrested Kavita in jail

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங் எனப் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இத்தகைய சூழலில் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர் ராவ் மகள் கவிதா, அவரின் இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது  அவர் திகார் சிறையில் இருந்து வருகிறார். இதற்கிடையே ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சஞ்சய் சிங் ஜாமீனில் இருந்து வருகிறார். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திகார் சிறையில் உள்ள கவிதாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பணமோசடி தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் கவிதா சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். முன்னதாக தனது மகனின் 12 ஆம் வகுப்பு பள்ளித் தேர்வுகளை காரணம் காட்டி கவிதா இடைக்கால ஜாமீன் கோரியிருந்தார். இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பட்வா அமர்வு முன்பு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது கவிதாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “கவிதாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது” எனத் தெரிவித்து கவிதாவின் இடைக்கால ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.