Skip to main content

உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் சந்திரபாபுநாயுடு

Published on 11/02/2019 | Edited on 11/02/2019
ch

 

டெல்லியில் இன்று காலையில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தை தொடங்கிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று இரவு 8 மணிக்கு மேல் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.

 


 ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.   
 

இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று காலை 8 மணி அளவில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தை தொடங்கினார். 

 

cn


 
இந்த உண்ணாவிரத  போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார்.  டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரக் ஓ பிரியன் ஆகியோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.  இரவு 8 மணிக்கு மேல் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத்தை நிறைவு செய்தார். 
முன்னாள் பிரதமர் தேவேகவுடா சந்திரபாபுவுக்கு தண்ணீர் கொடுத்தார்.  அதை அருந்தி போராட்டத்தை நிறைவு செய்தார் சந்திரபாபு நாயுடு.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

என்.டி.ஏ.வில் இணைய ஆர்வம் காட்டும் இரு பிரதான கட்சிகள்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Jagan Mohan Reddy, Chandrababu Naidu interested in joining BJP

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் கட்சியும் படுதீவிரமாக செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தன. 

ஆனால், இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்த நிதிஷ்குமார் கருத்து வேறுபாடு காரணமாக இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் இணைந்துள்ளார். அத்தோடு, பீகார் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த மகா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் சேர்ந்து மீண்டும் பீகார் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்தியா கூட்டணி போலவே என்.டி.ஏ என்ற பெயரில் பாஜக மற்றுமொரு கூட்டணியை உருவாக்கியுள்ளது. கடந்த தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக இடம் பெற்றிருந்த நிலையில் இந்த முறை கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவிற்கு அடுத்த பெரிய கட்சியாக அதிமுக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது, தேர்தல் கருத்துக்கணிப்புக்களை தனியார் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வரும் நிலையில், அதில் அனைத்திலும் இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் பலம் பெற்றுவிடக்கூடாது என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பாஜக வலுவாக இல்லாத மாநிலங்களில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடியை கொடுக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அந்த வகையில், ஆந்திர மாநிலத்திலும் என்.டி.ஏ கூட்டணியை வலுப்படுத்த பாஜக முயன்றுவருகிறது. அதனடிப்படையில், தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயு டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த நிலையில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கெனவே மத்திய அரசுடன் இணக்கமான உறவை வைத்துள்ள நிலையில் தற்போது பிரதமரை சந்தித்து பேசியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும், எதிர்க்கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியும் அடுத்தடுத்து பிரதமரை சந்தித்துள்ளது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சந்திப்பு ஒரு மாநிலத்தின் இரு பிரதான கட்சிகளும் ஒரே அணியில் இடம்பெறுவதற்காக மாறி மாறி பிரதமரை சந்திக்கின்றனர் என்றும் அரசியல் திறனாய்வாளர்கள் கூறிவருகின்றனர். 

Next Story

சந்திரபாபு நாயுடுவின் மேல்முறையீட்டு மனு; உச்சநீதிமன்றம் பரிந்துரை!

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Appeal Petition of Chandrababu Naidu; Supreme Court verdict

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது, திறன் மேம்பாட்டுக் கழகத்தில் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு  09/09/2023 அன்று கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்குப் பின் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கட்சித் தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆந்திராவில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

தொடர்ந்து அவரது உடல்நிலை உள்ளிட்ட மருத்துவ காரணங்களைக் குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது நடந்த விசாரணையில், ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. மேலும், அவர் எந்தவித நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது உட்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஆந்திர உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, ராஜமுந்திரி சிறையில் இருந்து 52 நாட்களுக்குப் பிறகு சந்திரபாபு நாயுடு வெளியே வந்திருந்தார். 

இதையடுத்து, ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சந்திரபாபு நாயுடுவிற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்னர், இந்த  வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது  சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கியது. 

முன்னதாக இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சந்திரபாபு நாயுடு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இது தொடர்பான வழக்கை நீதிபதிகள், அனிருத்தா போஸ், பெலா திரிவேதி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து கடந்த ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த தீர்ப்பு இன்று (16-01-24) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று (16-01-24) தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.