Case filed on ADMK Srivelliputur MLA Manraj

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த மான்ராஜ் என்பவர் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இதே தொகுதிக்குட்பட்ட லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன்(45). இவர், விருதுநகர் மாவட்ட ஊராட்சிக் குழு 3வது வார்டு உறுப்பினராக உள்ளார். எம்.எல்.ஏ. மான்ராஜின் மனைவி வசந்தி மாவட்டத்தின் ஊராட்சிக் குழுத் தலைவராக உள்ளார்.

கணேசன், நேற்று வன்னியம்பட்டி காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், ‘நான் விருதுநகர் மாவட்ட ஊராட்சிக் குழு 3வது வார்டு உறுப்பினராக உள்ளேன். எனது வார்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நிதி ஒதிக்கீடு செய்யவில்லை. இதுகுறித்து மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தேன். இதனால், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் வசந்தி மற்றும் அவரது கணவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மான்ராஜ் ஆகியோர் எனக்கு மிரட்டல் விடுத்து வந்தனர்.

Case filed on ADMK Srivelliputur MLA Manraj

Advertisment

கடந்த திங்கட்கிழமை என்னை செல்போனில் தொடர்புகொண்ட எம்.எல்.ஏ. மான்ராஜ், ‘டிச. 28ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று பேசினால், கொலை செய்துவிடுவேன்’ என மிரட்டல் விடுத்தார். எனவே எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். எம்.எல்.ஏ. மான்ராஜ், அவரது மனைவி வசந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

கணேசன் கொடுத்த புகாரை பெற்ற வன்னியம்பட்டி போலீஸார், எம்.எல்.ஏ. மான்ராஜ் மற்றும் அவரது மனைவி மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆடியோ ஒன்று வெளியாகி அது ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியை பரபரக்கச் செய்துள்ளது. அந்த ஆடியோவில், “செல்வம், உன் வீட்ல ஒருத்தன் வந்திருக்கான் பாத்தியா; உன் வீடு புகுந்து.. உன் வீட்டுக்குள்ளேயே கொலை நடந்திடும். நெட்ல இருக்கிறதலாம் எடுத்து குரூப்புல போடுவதற்கு இவன் யாரு? நான் பேசின ஆடியோவை எடுத்து எல்லா ஏ.டி.எம்.கே. குரூப்புலையும் போட்டிருக்கான். நான் ஆள் அனுப்புறேன்; உன் வீட்ல கொலை நடக்கலானா.. அவன இன்னிக்கு சோலிய முடிக்கல.. இன்னிக்கு உன் வீட்ல கொலை நடக்கும்” என கொலை மிரட்டலும், மிகவும் ஆபாசமாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகிஇருக்கிறது. இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது, எம்.எல்.ஏ. மான்ராஜ், கணேசனை மிரட்டிய ஆடியோ என சொல்லப்படுகிறது.