Skip to main content

இடைத்தேர்தல் அல்ல எடைத்தேர்தல்... கழகங்களின் 'கணக்கு' இதுதான்!

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

இன்னும் 10 நாட்களில் தேர்தலை சந்திக்க இருக்கும் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் ஜூரம் உச்சகட்டத்தில் இருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்திருந்தாலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் இலை காணாமல் போக, விக்கிரவாண்டி உள்ளிட்ட பல தொகுதிகளில் சூரியன் உதித்திருந்தது. இதற்கிடையே திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி சில மாதங்களுக்கு முன் உடல் நிலைக்காரணமாக மரணமடைந்தார்.

மூன்று மாதங்களுக்கு மேலாக காலியாக இருந்த இந்த தொகுதிக்கு வேலூர் மக்களைவை தொகுதியுடன் சேர்த்தே தேர்தல் நடத்தப்படும் என்று பார்க்கப்பட்ட நிலையில், அப்போது வேலூர் தேர்தல் தேதி மட்டும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அறிவிப்பு வெளியான சில தினங்களிலேயே ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி தலைமைகள் பிரச்சாரத்தை முடிக்கிவிட்டுள்ளது. சீன அதிபர் பயணத்துக்கு பிறகு முதல்வர் பிரச்சாரம் செய்ய உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரியில் முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ளார். அதிமுக தரப்பில் 15க்கும் மேற்பட்ட அமைச்சர் படை விக்கிரவாண்டியை சுற்றி வருகிறது. 100க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்களும் அதிமுகவிற்காக கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த தேர்தலில் தனியாக நின்ற பாமக 40,000 வாக்குகள் வாங்கிய நிலையில், அந்த வாக்குகள் முழுவதுமாக அதிமுகவுக்கு வந்து சேரும் என்று நம்புகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். 2014 தேர்தலில் தனியாக தருமபுரியில் வெற்றிபெற முடிந்த அன்புமணியால் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற முடியவில்லையே? என்றால் இது 'இடைத்தேர்தல்' என்று கமுக்கமாக சிரிக்கிறார்கள் அண்ணா திமுக நிர்வாகிகள்.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 22 தொகுதி இடைதேர்தலை நியாபகப்படுத்தினால், சார் அது மக்களவை தேர்தலின் போது நடந்தது என்று சொல்லிக்கொண்டே நம்மை கடந்து செல்கிறார்கள். இவர்களின் எண்ணம்தான் என்ன? என்று அதிமுக நிர்வாகிகளிடம் நாம் பேசியபோது பல அதிர்ச்சிகரமான தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள்.

 

gj



அதில், " விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளை முதல்வர் ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலாக நினைக்கவில்லை. தன்னுடைய ஆட்சிக்கு மக்கள் போடும் மார்க்காக பார்க்கிறார். தான் அதிக மார்க் எடுக்கவில்லை என்றாலும், திமுக தன்னை விட குறைவான மதிப்பெண்ணை எடுக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை போட்டுள்ளார். அந்த வகையில், விக்கிரவாண்டி தொகுதியின் சந்துபொந்துகளை கூட நன்கு அறிந்து வைத்துள்ள சண்முகத்திடம் விக்கிரவாண்டி தொகுதிக்கான தேர்தல் பொறுப்பை கொடுத்துள்ளார். பாமக வாக்குகளை திமுக யாரை வைத்து சமாதானம் பேசினாலும் அதிமுகவிற்கு வருவதை தடுக்க முடியாது. ஏனென்றால் சில மாதங்களாக பாமக தலைமைக்கும், திமுக தரப்புக்கும் நடக்கும் சண்டை உலகறிந்த ஒன்று. எனவே பாமகவின் வாக்குகளை வன்னிய பிரதிநிதிகளை வைத்து வளைத்து போடலாம் என்ற திமுகவின் கனவு கானல் நீராகத்தான் போக போகிறது. அதிமுகவின் மற்ற கூட்டணி கட்சியினருக்கு அங்கு போதுமான அளவு வாக்கு பலம் இல்லை என்றாலும், பாமக அதிமுகவை காப்பாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். இதனை தெரிந்து கொண்டதால்தான், வன்னிய வாக்குகளை மடைமாற்ற இன்று திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு ராமதாஸும் பதில் அளித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள மூன்று மாவட்டச் செயலாளர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை.

மாவட்ட செயலாளர் நியமனத்திலேயே வன்னியர்களுக்கு இடம் தராத திமுக, அரசாங்க  வேலைவாய்ப்பில் எப்படி இடம் தரும் என்ற கேள்வி அனைவரிடமும் தற்போது எழுந்துள்ளது. எனவே திமுகவின் அறிவிப்பு தேர்தல் களத்தில் பயன்தராது, அதிமுக 20000 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். நாங்குநேரியை பொறுத்துவரையில் அதற்கு நாங்கள் வேறு பார்முலா வைத்துள்ளோம். புதிய தமிழகம் ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும், அந்த வாக்குகளை எப்படி அறுவடை செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். கொஞ்சம் ரெஸ்க் எடுத்து களத்தில் இறங்கினால் காங்கிரஸை களத்தில் இருந்தே காணாமல் போக செய்யும் வல்லமை அதிமுகவிற்கு இருக்கிறது" என்றார்.

அதிமுக தரப்பில் நிலைமை இப்படி என்றால் விக்கிரவாண்டியில் திமுக வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதில் தவறு நிகழும் பட்சத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி மோடி எதிர்ப்பலையில் கிடைத்த ஒன்று, அதிமுக பாஜக இல்லாமல் தனித்து நின்றிருந்தால் அவர்களே வெற்றிபெற்றிருப்பார்கள் என்ற செய்தி உடனடியாக பரப்பப்படும். இது இன்னும் 15 மாதங்களில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் திமுகவிற்கு பின்னடைவை கொடுக்கும். எனவே இதனை நன்கு உணர்ந்ததாலோ என்னவோ இத்தொகுதி மீது திமுக தலைமை அதீத அக்கறை காட்டி வருகிறது.

அதன் உச்சபட்சமாக, " திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதுதொடர்பான கோரிக்கை எதுவும் எழாத நிலையில், அதற்கான அவசியம் எங்கு வந்தது என்ற வினாவும் அரசியல் அரங்கில் திமுக தரப்பை பார்த்து அதிமுக எழுப்பி வருகிறது.

 

gk



இதுதொடர்பாக திமுக பிரமுகரிடம் பேசியபோது, "பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் அவரை போல ஸ்டாலினுக்கு ஓய்வு இல்லை. காலையில் ஆரம்பித்து இரவு வரை திமுகவை வம்பிழுக்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது. 2014 தேர்தலில் தனியாக தருமபுரியில் வெற்றிபெற முடிந்த அன்புமணியால் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற முடியவில்லையே? பாமகவால் வெற்றிபெற முடியும் என்றால், அவர்களின் கோட்டை என்று சொல்லப்பட்ட தருமபுரியை ஏன் கோட்டை விட்டார்கள். வெற்று கூச்சல் இடுவதற்கு பாமகவை விட ஒரு சிறந்த கட்சி தமிழகத்தில் இன்னும் பிறக்கவில்லை.

மூன்று மாவட்ட செயலாளர்கள் பதவி இருந்தும் வன்னியருக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்று அவர் கூறுவது ஆடு நனைகிறதே என்று ஓநாய் வருத்தப்பட்ட கதைதான். கட்சி தொடங்கிய நாளில் இருந்து கூடவே இருக்கும் ஜி.கே மணியை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி, முதலில் அவர்கள் கட்சியில் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் இருக்கிறது என்று காட்டச் சொல்லுங்கள். வார்டு மெம்பரில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வரை அவர் மகனே போட்டியிடுவார், அவரை தவிர வேறுயாரும் கட்சியில் இல்லையா? திமுகவில் வன்னியர் மாவட்டச் செயலாளர்கள் இல்லையா என்ன? நடந்து முடித்த நாடாளுமன்ற தேர்தலில் 5-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வன்னிய இன பிரதிநிதிகளை திமுக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கவில்லையா? அதையும் தாண்டி தலைவர் ஸ்டாலின் அவர்கள் இந்த உள் ஒதுக்கீடு விவகாரத்தை தேர்தலுக்காக கையில் எடுக்கவில்லை. ஏற்கனவே கலைஞரால் கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லப்பட்ட ஒன்றுதான். எங்களால் இரண்டு தேர்தலிலும் வெற்றிபெற முடியாத காரணத்தால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. எனவே தற்போது ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்கிறோம். இதில் எங்கே இருக்கிறது அரசியல்? விக்கிரவாண்டி திமுகவிற்கு கேரண்டி" என்றார் முடித்தார் அந்த நிர்வாகி.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.