BJP trying to form alliance with AIADMK again

Advertisment

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் சமீபத்தில் அமைக்கப்பட்டன. அதன்படி நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அதிமுக தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்டணியை உருவாக்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்டணி அமைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்,“ 15 நாட்களுக்கு முன்பே ஒரு முறை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினேன். எடப்பாடி பழனிசாமியை சந்தித்த போது அதிமுக - தா.மா.க கூட்டணிக்காக பேசாவிட்டாலும், நாட்டு நலன், எதிரிகளை வீழ்த்துவது குறித்து பேசினேன் என்று கூறுவதில் இருந்தே புரிந்து கொள்ளுங்கள்.

எதிரியை வீழ்த்த பலமான கூட்டணி தேவை என்று எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினேன். அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த பிறகு இரண்டு கட்சிகளும் இணைய வேண்டும் எனவும், அதிமுக - பாஜக கூட்டணி சேர்ந்தால் தான் திமுக கூட்டணியை எதிர்கொள்ள முடியும் எனவும் தமாகா கூறிவருகிறது” எனத் தெரிவித்தார்.