சட்டப்பேரவையில் கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் திமுக எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகன் பேசினார். அவரின் கேள்விகளுக்கு தொடர்ச்சியாக அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன் பின்னர், திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தொடர்ந்து பேச முயன்றார். ஆனால், நேரத்தை சுட்டிக்காட்டி சபாநாயகர் ப.தனபால் அனுமதி மறுத்தார். ஜெ.அன்பழகன் எழுந்து நின்று நான் 10 நிமிடங்கள் தான் பேசினேன். எனக்கு பேச வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டு கொண்டே இருந்தார். அதன் பின்பு சபாநாயகர் இருக்கை அருகே சென்று எனக்கு பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். அதனால் ஜெ.அன்பழகன் தான் கையில் வைத்திருந்த, கவர்னர் உரையை கிழித்து சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைத்துவிட்டு வெளியே சென்று விட்டார்.
இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் இந்த அவைத் தொடர் முழுவதும் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் அன்பழகன் சஸ்பெண்ட் செய்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அது வெறும் வெள்ள பேப்பர்னு சொல்லி உங்க கட்சி கோர்ட்டில் தப்பிச்ச மாதிரி இந்த ஸமயம் இது சட்டசபையிலேயே நடந்ததால் இந்த சஸ்பெண்ட் என்றும், எப்போதும் உலக அளவில் ஏற்றுக்கொண்ட ஒரு பழமொழி அடி உதவறமாதிரி அன்ணன் தம்பி உதவ மாட்டான் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்துக்கு திமுகவினர் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.