நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தேனி தொகுதியை மற்ற அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்தது. தினகரனின் அமமுக கட்சியும் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. நடைபெற்ற தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு பிறகு 5 சதவிகித வாக்குகளுக்கு மேல் பெற்று மூன்றாவது இடத்தை தினகரன் கட்சி பெற்றது. இந்த நிலையில் தேர்தலில் பணப்பட்டுவாடா காரணமாக வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதில் திமுக சார்பாக கதிர் ஆனந்தும், அதிமுக சார்பாக ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகின்றனர்.

Advertisment

ammk

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி போட்டியிட வில்லை என்று தினகரன் அறிவித்தார். இதன் பின்னணி என்னவென்று விசாரித்த போது, தினகரன் தரப்பு முதலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு ஒரு கணிசமான வாக்குகளை பெற்று இழந்த பெயரை மீண்டும் கொண்டு வரலாம் என்று திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் பாஜக தலைமை தினகரன் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடுவதை விரும்பவில்லை என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தினகரன் கட்சி போட்டியிடுவதால் அதிமுகவின் தொண்டர்களின் வாக்கு தினகரன் பக்கம் போவதால் அதிமுக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது என்று அதிமுகவும், பாஜகவும் கருதுவதாக சொல்லப்படுகிறது.

மேலும் தினகரன் கட்சி இந்த தேர்தலில் போட்டியிட்டால் அமலாக்கதுறை, தேர்தல் கமிஷன், வருமான வரித்துறை என அனைத்து அதிகாரிகளையும் களத்தில் இறக்கி விட்டு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நெருக்கடியை சந்திக்க விரும்பாத தினகரன், சசிகலா தரப்பு வேலூர் தேர்தலில் இருந்து பின்வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டோம். கட்சியை பதிவு செய்த பின்னரே தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம் என தினகரன் கூறியுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.