கடந்த வாரத்தில் சசிகலா புஷ்பா தனது கணவரை தாக்கினர் என்ற செய்தி பரவியது. பின்பு இதுகுறித்து பேசிய சசிகலா தரப்பு அந்த மாதிரி சம்பவம் எதும் நடக்கவில்லை என்று விளக்கம் தெரிவித்தனர். இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னை அடித்தார் என்று மாநிலங்களவையில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் சசிகலா புஷ்பா எம்.பி கூறியதாவது, `மோடி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். அவரது சமூகநலத் திட்டங்கள் தமிழகத்தில் சரியாக கொண்டு சேர்க்கப்படவில்லை. மோடி மீது தமிழ்நாட்டில் தவறான நிலை உள்ளது. இனி என் நடவடிக்கைகள் மோடி அரசு மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவே இருக்கும்.
மேலும் தமிழகத்திலும் மோடி ஆட்சி அமைந்தால்தான் நல்லாட்சி பிறக்கும்' என்று தெரிவித்துள்ளார். சசிகலா புஷ்பாவின் திடீர் பாஜக ஆதரவு நிலை குறித்து விசாரித்த போது , தமிழ்நாட்டில் இருந்து தேர்வான அதிமுக மாநிலங்களவை எம்.பி.க்களை பாஜக வளைக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான மறைமுக வேலையை பாஜக சசிகலா புஷ்பாவை வைத்து காய் நகர்த்தி வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். பாஜக மற்றும் சசிகலா புஷ்பாவின் இந்த அரசியல் உள்ளடி வேலைகளால் அதிமுக தலைமை குழம்பி இருப்பதாக சொல்கின்றனர்.