bjp

Advertisment

Advertisment

அருணாச்சல பிரதேசத்தைத் தொடர்ந்து தற்போது 'லடாக்' மற்றும் 'சிக்கிம்' ஆகிய பகுதிகளிலும் வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, அப்பகுதிகளில் ராணுவ நடமாட்டத்தையும் அதிகரித்துள்ளது. கடந்த 5-ஆம் தேதி லடாக் எல்லைப் பகுதியில் இந்திய- சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருநாட்டு ராணுவமும் படைகளைக் குவித்து வரும் சூழலில், எந்த மோசமான சூழ்நிலையையும் சமாளிக்கத் தயாராக இருக்கும்படி சீன அதிபர் அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த எல்லைப் பிரச்சனையில் இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

மேலும், வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், டொனால்ட் ட்ரம்ப் சம்மன் இல்லாமலே ஆஜராகத் துடிக்கிறார். பாகிஸ்தானோடு உரசல், சீனாவோடு சிக்கல் வரும்போதெல்லாம் பஞ்சாயத்து பண்ண 'நான்ரெடி நீங்கரெடியா' என்கிறார்? அவர் மோடிக்கு ஆதரவாகப் பேசுகிறாரா? கிண்டல் பண்ணுகிறாரா? இந்திய-சீன எல்லையிலோ நம் படையினர் 'திரும்பிபோ' எனப் பதாகை பிடிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் கூறிய கருத்துக்கு நடிகையும், பா.ஜ.க. ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில், எவ்வளவு வெட்கக்கேடானது? நீங்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை ஆனால் மீம்ஸ் போடுவது தான் ஒரே வேலை,என்ன கொடுமை இது. இந்தக் கொடுமையை யாரும் கேட்க மாட்டீங்களா என்றும், குளிர் அறையில் உட்காந்து கொண்டு இந்திய ராணுவத்தைக் கேலி செய்கிறார்கள் என்றும், பயனுள்ள மாதிரி எதாவது செய்துவிட்டு மற்றவர்களைக் கேலி செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார்.