அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய பா.ரஞ்சித் அடுத்து ரஜினி நடித்த கபாலி, காலா படங்களை இயக்கினார். தொடர்ந்து தனது நீலம் பட நிறுவனம் சார்பில் பரியேறும் பெருமாள், குண்டு படங்களை தயாரித்தார். தற்போது பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 5 புதிய படங்களை தயாரிப்பதாக அறிவித்துள்ளார். இதன் அறிவிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் ரஞ்சித் பேசும் போது, "சினிமா என்பது ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கானவர்களுடன் பேசக்கூடிய ஒரு சக்திவாய்ந்த ஊடகம். ஒரு நல்ல படம் எவ்வாறு பார்வையாளர்களால் ஏற்கப்படுகிறது, மதிக்கப்படுகிறது என்பதை நாம் அனைவரும் இந்த சினிமா துறையில் கண்டிருக்கிறோம். நான் தயாரித்த முதல் இரண்டு படங்களையும் மக்களுடன் இணைக்க முடிந்ததற்கு மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் என்று பேசினார்.
மேலும் பா.ரஞ்சித் தயாரிக்கும் 5 படங்களை லெனின் பாரதி, மாரி செல்வராஜ், சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஆகியோர் இயக்கவுள்ளனர். இது குறித்து பாஜக கட்சியை சார்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், இயக்குனர் பா.ரஞ்சித் இதுவரை நான்கு படங்களை இயக்கியுள்ளார். அந்த நான்கு படங்களின் தயாரிப்புகளும் வேறு நிறுவனங்கள் என்றும், பெரிய அளவில் பின்புலம் இல்லாமல் இவருக்கு இவ்வளவு படங்களை தயாரிக்க பணம் எப்படி வந்தது என்று சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்து கூறிவருகின்றனர்.