இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி (05.02.2024) திடீரென சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.கவை இணைப்பது தொடர்பாக ராமதாஸ் உடன் சி.வி. சண்முகம் தைலாபுரத்தில் கடந்த 24 ஆம் தேதி (24.02.2024) மாலை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் எனத் தகவல் வெளியாகி இருந்தது.
இத்தகைய சூழலில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்க கோரும் சில தொகுதிகளை வழங்க அ.தி.மு.க. மறுத்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதனால் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்ததால் பா.ஜ.க.வுடன் பா.ம.க. பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் பா.ஜ.க. - பா.ம.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு எட்டு முதல் பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர்களுடன் அன்புமணி நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இணைய வேண்டுமானால் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும், அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும் தற்போது நிபந்தனைகள் ஏதும் இன்றி பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.