Skip to main content

“மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் ஊழல் செய்தது பா.ஜ.க தான்” - அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
BJP is the one who committed corruption through medical insurance scheme says Minister Udayanidhi

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான சச்சிதானந்தத்தை ஆதரித்து நத்தம் பஸ் நிலையம் அருகே  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேனில் இருந்தவாறே நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை வைத்து கூட்டணிக் கட்சி வேட்பாளரான சச்சிதானந்தத்திற்கு வாக்கு கேட்டார். இந்த கூட்டத்திற்கு அமைச்சர் ஐ. பெரியசாமியும், மேற்கு மாவட்டச் செயலாளரும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணியும் ஆயிரக்கணக்கான பொதுமக்களையும் கட்சிக்காரர்களையும் பெரும் திரளாகத் திரட்டி இருந்தனர்.

அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் சார்பில் இங்கு போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தம் தங்கள் மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வை ரத்து செய்வதற்காக இன்று வரை போராடிக் கொண்டிருக்கிறோம். இதுவரை நீட் தேர்வு காரணமாக உயிரிழந்தவர்களான மாணவி அனிதா முதல் அனைவரின் வீடுகளுக்கும் ஆறுதல் கூறி வருகிறேன். இது குறித்து ஒன்றிய பாஜக அரசு நீட் விலக்கு மசோதாவிற்கு மௌனம் காத்து வருகிறது. ஒன்றிய அரசுக்கு நாம் ரூ.6.5 லட்சம் கோடி கொடுத்தால் அது வெறும் ரூ.1.5 லட்சம் கோடியை மட்டுமே நமக்கு தருகிறது.

அதாவது ஒரு ரூபாய் மாநில அரசிடம் வாங்கிக் கொண்டு நமக்கு வெறும் 28 பைசா மட்டுமே கொடுக்கிறது மோடி அரசு. எனவே பிரதமர் மோடிக்கு இனிமேல் 28 பைசா என பெயர் கூறி அழைக்க வேண்டும். கோவிட் பாதிப்பு சமயத்தில் பிரதமர் மோடி விளக்கேற்று, தட்டைத் தூக்கு கோவிட் ஓடிரும் என்று சொல்லி ஆட்சி செய்தார். ஆனால் நமது முதல்வர் அவர்கள் அதற்கான தீர்வு தடுப்பூசிதான் என்று கூறி மக்களையும் போட வைத்து தானும் போட்டுக் கொண்டார். அது மாத்திரமல்ல கோவிட் வார்டுக்குள் சென்று பாதித்தவர்களுக்கு ஆறுதல் கூறி வந்தார். இந்தியாவிலேயே தைரியமாகவும் முன்னுதாரணமாகவும் விளங்கியவர் நமது முதல்வர். மேலும் கோவிட் பாதிப்பிலிருந்து வெளியே வருவதற்கு வழிகாட்டியாக விளங்கியவர்கள் தமிழக மக்களாகிய நீங்கள் தான். 2019ல் ஒன்றிய அரசு சிஏஏ சட்டம் கொண்டு வந்தது. அதிமுக ஆதரித்து வெற்றி பெற வைத்தது. ஆனால் நமது முதல்வர் அன்றும் எதிர்த்தார். இன்றும் தமிழ்நாட்டுக்குள் சி.ஏ.ஏ. சட்டத்தை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார். சி.ஏ.ஏ. சட்டத்திற்காக அதை கிழித்து எறிந்து எதிர்ப்பு தெரிவித்து எனது அரசியல் வாழ்வில் முதன்முதலாக கைது செய்யப்பட்டு ஒரு நாள் முழுவதும் சிறை வைக்கப்பட்டேன்.

தமிழக முதல்வர் ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகளில் முதல் கையெழுத்து மகளிர்க்கு அரசு டவுன்பஸ்சில் இலவச பயணம் செய்யலாம் என்ற கையெழுத்து. இதன் மூலம் கடந்த 3 வருடத்தில் 455 தடவை பயணம் செய்திருக்கிறீர்கள். இதனால் மாதம் ரூ.800 முதல் 900 வரை சேமிப்பு செய்திருக்கிறீர்கள். இந்த திட்டத்தை மகளிர் நல்ல முறையில் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்றால் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பெண்கள் மேலாடை அணிவது, வீட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை என்ற பெண்களுக்கு எதிரானவை அகற்றி பெண்கள் முன்னேற்றத்தில் அன்று முதல் திராவிடக் கொள்கை முன்னிறுத்தப்பட்டு இன்று வெற்றி கண்டுள்ளது. அந்த வகையில் நமது திராவிட மாடல் ஆட்சியில் அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி செல்லும் மகளிர்க்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் புதுமைப் பெண் திட்டம். இதனால் நிறைய பெண்கள் பயிலும் நிலை வந்துள்ளது. இதேபோன்று மாணவர்களுக்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் பயன்பெற முடியும்.
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் நிம்மதியாகச் சென்று வருகின்றனர். 2014-ல்  சமையல் சிலிண்டர் விலை ரூ. 450. இப்பொழுது  மோடி ஆட்சியில் 1200 வரை உயர்ந்துள்ளது.

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ரூ. 500 அதிகரித்துவிடும். நமது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமையல் சிலிண்டர் விலை ரூ.500/- பெட்ரோல் லிட் ரூ 75/-, டீசல் லிட். ரூ 65க்கும் விற்கப்படும். நெடுஞ்சாலையில அமைக்கப்பட்டுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளும் அகற்றப்படும். 2014ம் ஆண்டில் இருந்த சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 150 மட்டுமே. மோடியின் இந்த 9 வருட ஆட்சியில் 1100 சுங்கச் சாவடிகள் உள்ளது. இதன் மூலம் மக்கள் பாதிப்படைகின்றனர். மேலும் மத்திய தணிக்கை குழு  ரூ.7.5 லட்சம் கோடி பணத்தை காணவில்லை  என்று  கூறியுள்ளது.

இதன் மூலம் சாலை அமைப்பதற்கு 1 கி.மீக்கு ரூ.250 கோடி என்றும் 88 ஆயிரம் பேருக்கு ஒரே செல் நம்பரிலிருந்து மருத்துவ காப்பீடு திட்டம் மூலம், இறந்து போனதாக கூறி பணம் எடுத்து ஊழல் செய்துள்ளனர். மோடி, திமுகவுக்கு தூக்கம் கிடையாது என்று கூறியுள்ளார். ஆம் மோடியை ஆட்சியை விட்டு அகற்றி அவரை தூங்க அனுப்ப, தேர்தல் நடைபெற உள்ள 26 நாட்களும் திமுகவிற்கு தூக்கம் கிடையாது. எனவே சச்சிதானந்தம் வெற்றி உறுதியானது. ஆனால் ஒவ்வொருவரும் மோடி ஆட்சியின் சீர்கேடுகளை எடுத்துக் கூறி திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வைத்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சச்சிதானந்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.