BJP MLA Vanathi Srinivasan criticizes Rahul Gandhi

Advertisment

மோடி என்ற சமூகத்தை அவதூறாகப் பேசியதாகக் கூறி ராகுல் காந்திக்கு எதிரானஅவதூறு வழக்கில் சூரத்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவாக கருத்து தெரிவித்தாலும், பாஜகவினர் ராகுல் காந்தியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2019 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, மோடி என்ற சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியது, அந்த சமுதாயத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட அவதூறு வழக்கில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதனால், ராகுலின் மக்களவை உறுப்பினர் பதவி பறிபோனது.

சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை, குஜராத் உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. இதனை எதிர்த்து ராகுல் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவருக்கு அளிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது.

Advertisment

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் முன்பு, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என ராகுல் வீர வசனம் பேசினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மன்னிப்பு கேட்க, நான் சாவர்க்கர் அல்ல. என, நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி அந்தமான் சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுந்தண்டனை அனுபவித்த, வீர சாவர்க்கரை அவமதிக்கும் வகையில் ராகுல் பேசினார். அதற்கு, காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் போன்றவர்களே கண்டனம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது.

மன்னிப்பு கேட்க மாட்டேன் என ராகுல் பேசியதை, ஏதோ அவர் மன்னிப்பே கேட்காத மாவீரர் போல, காங்கிரஸ் கட்சியினரும், அக்கட்சியின் ஆதரவாளர்களும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், உண்மை அதற்கு நேர்மாறாக உள்ளது. ராகுலைப் பொறுத்தவரை, பிற கட்சிகளை, தனக்கு பிடிக்காத தலைவர்களை அவமதிக்கும் வகையில் பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். அதனால் அவர் மீது, 10-க்கும் அதிகமாகஅவதூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.

ரஃபேல் போர் விமானம் தொடர்பான விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் கூறாத ஒன்றை கூறியதாக ராகுல் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அதற்காக அவர் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கடந்த 2019 ஏப்ரலில் ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இது அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

Advertisment

ஆனால், இப்போது இதுவரை மன்னிப்பே கேட்காதது போல வீர வசனம் பேசி வருகிறார். ராகுல், இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம் மாற்றிப் பேசும் சந்தர்ப்பவாத தலைவர் என்பது நிரூபணமாகியுள்ளது. எப்படியாவது பிரதமராகி விட வேண்டும் என்ற அதிகார வெறியில் ராகுலும், காங்கிரஸ் கட்சியினரும்வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர்.

ராகுலின் வெறுப்பு பிரச்சாரத்திற்குத்தான் சூரத் நீதிமன்றமும், குஜராத் உயர் நீதிமன்றமும் தண்டனை வழங்கின. இந்த தண்டனையை, உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தாலும், ராகுலின் வெறுப்பு பேச்சை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், எப்போதும் போலவே, உண்மை வென்றது, நீதி வென்றது என்றெல்லாம் பேசி உண்மையை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், மக்கள் அனைத்தையும் அறிவார்கள்.

அதனால்தான், 1989-ல் இருந்து 35 ஆண்டுகளாக நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாராலும் பிரதமராக முடியவில்லை. 2014, 2019 எனத்தொடர்ந்து இரு மக்களவைத் தேர்தல்களில், எதிர்க்கட்சி அந்தஸ்தைகூட பெற முடியாத அளவுக்கு காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் இதுதான் நடக்கும். தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும். நல்லாட்சி நாயகன் பிரதமர் திரு. நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராவார். இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.