Skip to main content

நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை கொடுத்த டார்கெட்; வெள்ளையாக்கப்படும் கருப்பு பணம் - பகீர் ரிப்போர்ட்

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

BJP's mega plan ahead of the parliamentary elections

 

அடுத்த ஆண்டு வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக இப்போதே கட்சி நிதியை வசூலிக்கத் தொடங்கிவிட்டது பா.ஜ.க., அதேநேரம் எதிர்க்கட்சிகளுக்கு நிதி கொடுக்கக்கூடாது என்று தொழில் நிறுவனங்களையும் ரெய்டைக் காட்டி மிரட்டுகிறதாம்.  பா.ஜ.க. தரப்பின் இந்த அதிரடி நடவடிக்கை எதிர்க்கட்சிகளை அதிர வைத்திருக்கிறது. 

 

தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. அதனைக் கட்சி ரீதியாக 59 மாவட்டங்களாகப் பிரித்து வைத்துள்ளது பா.ஜ.க., ஒவ்வொரு மாவட்டமும் எவ்வளவு நன்கொடை வசூலிக்க வேண்டும் என ஒரு டார்கெட் ஃபிக்ஸ் செய்துள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்துக்கு 7 கோடி, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 10 கோடி, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 10 கோடி, எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் உள்ள தென்காசி மாவட்டத்துக்கு 15 கோடி, முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏவான எம்.ஆர்.காந்தி ஆகியோர் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 15 கோடி, தேசிய மகளிரணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் உள்ள கோவை மாவட்டத்துக்கு 25 கோடி என ரேட் ஃபிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறதாம்.

 

இப்படி  தமிழ்நாட்டில் வசூல் செய்ய வேண்டிய மொத்த தொகை என 500 கோடிக்கு டார்கெட் வைத்திருக்கிறார்களாம். இதற்காக 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய் நன்கொடை புத்தகம், அச்சடிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வழங்கப்பட்டுள்ளதாம். இதைத் தொடர்ந்து வசூல் பணிகள் ஜரூராகத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவரான போளுர் ஏழுமலை தனது மாவட்டத்துக்கு உட்பட்ட வந்தவாசி, சேத்பட், போளுர், ஆரணி ஆகிய ஒன்றியங்களில் உள்ள கிராமங்களுக்கு படையுடன் சென்று கட்சி நிர்வாகிகளிடம் ரசீது புத்தகங்களைத் தந்திருக்கிறார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியும் கூட்டம் போட்டு நிர்வாகிகளிடம் ரசீது புத்தகங்களை தந்து வசூல் வேட்டையில் இறக்கிவிட்டுள்ளார். திருவண்ணாமலையில் வியாபாரம் செய்யும் சேட்டுகள், மார்வாடிகள் ஓரளவு நன்கொடை தந்துள்ளார்கள். கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் சிலர் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மொய் எழுதியுள்ளார்கள். 

 

இதுபற்றி பா.ஜ.க. நிர்வாகிகளிடம் கேட்டபோது, "நன்கொடை வசூலிக்கும் தொகையில் 40 சதவீதம் மாவட்ட நிர்வாகத்துக்கும் 60 சதவீதம் மாநில தலைமைக்கும் உரியதுன்னு சொல்லியிருக்காங்க. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதுமே இப்படி கட்சிக்கு நிதி திரட்டும் பணியை செய்யச் சொல்லியுள்ளது எங்கள் தேசியத் தலைமை” என்கிறார்கள். 

 

இந்தியாவிலுள்ள 7 தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பை சில மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் வெளியிட்டது.  அதன்படி, பாஜக 4,847 கோடி ரூபாயோடு முதலிடத்தில் உள்ளது. சுமார் 50 ஆண்டுகள் இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு வெறும் 588 கோடி மட்டுமே. 2018-ல் மோடி அரசு, தேர்தல் பத்திர சட்டத்தைக் கொண்டு வந்தது. அது நடைமுறைக்கு வந்தபின் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 18 அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர நன்கொடை விவரத்தினை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இப்படி 2018 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 18 அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் வழியாக 9,208 கோடி நன்கொடை பெற்றுள்ளன. அதில் 5,270 கோடி ரூபாயை பா.ஜ.க. மட்டுமே பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 964 கோடி பெற்றுள்ளது. இப்படி சகல வகையிலும் இந்தியாவின் பணக்கார கட்சியாக உருவாகியுள்ளது பா.ஜ.க. அப்படியிருக்க எதற்கு மக்களை நேரடியாக சந்தித்து நன்கொடை வசூலிக்க வேண்டும்? என்கிற கேள்வியை, டெல்லியோடு நேரடித் தொடர்பில் உள்ள தமிழக பாஜக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம். புன்னகையோடு பதில் சொல்லத் தொடங்கிய அவர்கள், “நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க பல்லாயிரம் கோடி ரூபாய்கள் தேவைப்படுகிறது. கடந்த காலங்களில் பிரதமர் மோடி என்கிற பிம்பத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது. அது அப்போது பெரியதாக கை கொடுத்தது. அதனால் பணத்தை வைத்து இந்த முறை தேர்தலை சந்திக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

 

அதேபோல், கட்சிக்கு வெளியேவுள்ள கறுப்புப் பணத்தை நன்கொடைக் கணக்கில் சேர்த்து கருப்பை வெள்ளையாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எப்படி என்றால், கட்சிகளுக்கு நேரடியாக 20 ஆயிரத்துக்கு மேல் பணமாக நிதி வழங்கியவரின் விவரங்களை மட்டும்தான் தேர்தல் ஆணையத்துக்கு கட்சிகள் வழங்க வேண்டும். அதனால் 5 ஆயிரம் 10 ஆயிரம் என்று மக்கள் நிதி தந்ததாக பலரின் பெயர்களில் கையிருப்பை வரவு வைத்துவிடுவோம். இதனால் எங்கள் கட்சியின் கருப்புப் பணம் வெள்ளைப் பணமாக மாறிவிடும்” என்கிறார்கள்.  

 

இப்படி தங்களிடமுள்ள ஊழல் பணத்தினை வெள்ளையாக்கத் துடிக்கும் பா.ஜ.க., எதிர்க்கட்சிகளுக்கு நன்கொடை தரும் தொழில் நிறுவனங்களை மிரட்ட வருமான வரித்துறையை ஏவி வருகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.  குறிப்பாக, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பரிதா காலணி தொழிற்சாலை குரூப் இந்தியாவில் முக்கியமானது. இவர்கள் காங்கிரஸ் கட்சியோடும், மாநிலத்தை ஆளும் தி.மு.க.வோடும் நெருக்கமாக உள்ளார்கள். நேரடியாகவும் மறைமுகமாவும் பல கோடி ரூபாயை அவர்களுக்கு  இவர்கள் தேர்தல் நிதியாகத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தை மிரட்ட வருமான வரித்துறை அடுத்தடுத்து இரண்டு முறை ஏவி விடப்பட்டிருக்கிறது.

 

கடந்த பிப்ரவரி மாதம் வேலூர் குடியாத்தம் அம்பாலால் குரூப், கன்னியாகுமரியின் கே.கே.எம் குழுமம், ஆயுர்வேதிக் மருந்து தயாரிக்கும் குரூப் போன்றவற்றிலும் ரெய்டு செய்ததற்கான காரணம், காங்கிரஸுக்கு இந்த கம்பெனிகள் நன்கொடை தருகின்றன என்பதால்தானாம். எப்போதும் ரெய்டு செய்தால் என்ன கைப்பற்றப்பட்டது என்கிற தகவலை வருமான வரித்துறை வெளியிடும். இப்போதெல்லாம் தகவலை வெளியிடுவதில்லை. காரணம் ரெய்டில் சிக்கும் ஆவணங்களை வைத்து, பா.ஜ.க. டீலிங் பேசுகிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள் எதிர்க்கட்சியினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிவசேனாவில் இணைந்த பாலிவுட் நடிகர்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Bollywood actor joined Shiv Sena

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் மூத்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இன்று (28.03.2024) தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் சிவசேனாவில் இணைந்தது குறித்து பாலிவுட் நடிகர் கோவிந்தா கூறுகையில், “நான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசியலில் இருந்தேன். அதாவது 14வது மக்களவை காலம் ஆகும். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சரியமான தற்செயல் நிகழ்வு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.  சிவசேனாவில் இணைந்த நடிகர் கோவிந்த மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.