கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,700- லிருந்து 23,077 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 681- லிருந்து 718 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,325- லிருந்து 4,749 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 6,430 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 840 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 283 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடி எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், "மோடி ஜி அவர்களின் சிறந்த நடவடிக்கைகள் காரணமாகவே இன்று இந்தியாவில் கரோனா 3 -ஆம் நிலைக்குச் செல்லவில்லை. மேலும் பல வளர்ந்த நாடுகளில் பாராசிட்டமால் போன்ற அடிப்படை மருந்துகூட கிடைக்காத சூழ்நிலையில் இந்தியா உலகிற்கே உதவியுள்ளது என்றும், இந்தியாவில் பல தேசவிரோத, பிரிவினைவாத, ஈவேன்ஞ்சலிஸ்ட், ஜிகாதி மற்றும் அர்பன் நக்ஸல்கள் இந்தப் போலி ட்விட்டரை வைத்துக்கொண்டு கடந்த சில நாட்களாகப் போட்ட ஆட்டம் க்ளோஸ் என்றும் இந்தியாவில் சரியான நடவடிக்கைகள் மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்தியதோடு உலக நாடுகளுக்கும் உதவியதன் மூலம் இன்று உலகத் தலைவராகத் திகழ்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு, சோனியாவின் குடியுரிமை சான்றிதழிலேயே சோனியா என்கிற அன்டானியா மைனோ என்று உள்ளது. எனவே அர்ணாப் கோஸ்வாமி பேசியதில் தவறென்ன என்றும் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா பற்றிய இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.