Skip to main content

பாஜகவுக்கு தார்மீக உரிமை இல்லை! போட்டுத்தாக்கும் ஜெயக்குமார்!

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

The BJP has no moral right! Jayakumar!


அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்கும் என ஓ.பி.எஸ். அழுத்தமாகச் சொன்னாலும் கூட்டணி குறித்த மோதல்கள் இன்னும் முடிந்தபாடில்லை. இதனால், அதிமுகவில் பரபரப்பு இருந்து கொண்டே இருக்க, பாஜகவை பற்றி  கருத்து சொன்ன முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டி மேலும் சூட்டைக் கிளப்பி வருகிறது.

 

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோற்றது என்று வெளிப்படையாகப் பேசினார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். இதற்கு பதிலடி தரும் வகையில், உங்களால் (அதிமுக) தான் நாங்கள் (பாஜக) தோற்றோம் என்று பாஜக ராகவன் வரிந்து கட்ட, கூட்டணி மோதல் இரு கட்சிக்குள்ளும் வெடித்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்கிறது என்று விளக்கமளித்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.


கட்சியின் ஒருங்கிணைப்பாளரே இப்படி சொன்னதால் கூட்டணி குறித்த சர்ச்சைகளும் மோதல்களும் நின்று போகும் என இரு கட்சித் தொண்டர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், தான் சொன்ன கருத்தில் இருந்து மாறாமல், மீண்டும் பாஜகவை சீண்டினார் சி.வி.சண்முகம்.

 

இது, பாஜகவில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில், “சி.வி.சண்முகத்தின் கருத்தினை இபிஎஸ் - ஓபிஎஸ் ஏற்கிறார்களா? பதில் சொல்ல வேண்டும். இல்லையெனில் சண்முகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவுக்கு 87,403 ஓட்டுகள் போட்ட மெஜாரிட்டி மக்களை அவமானப்படுத்திய சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என பதிவு செய்திருந்தார். அவரது பதிவு காட்டுத் தீ போல பரவ, அதிமுகவினர் கொந்தளித்திருக்கின்றனர்.

 

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “நடவடிக்கை எடுக்கச் சொல்லி யாரும் எங்களுக்கு உத்தரவிட முடியாது. வெளியில் எந்த கருத்தையும் சண்முகம் பேசவில்லை. கட்சிக் கூட்டத்தில் பேசியவை. அதை குற்றம் என சொல்ல முடியாது. குற்றம் சொல்ல இவர்கள் (பாஜக) யார் ? எங்கள் கட்சி வேலையை நாங்கள் பார்க்கிறோம். அதேபோல அவர்களும் (பாஜக) அவங்க வேலையைப் பார்க்கட்டும். நடவடிக்கை எடுக்கச் சொல்லும் தார்மீக உரிமை பாஜகவுக்கு இல்லை. அப்படி சொல்லவும் கூடாது” என்று பாஜகவின் கருத்துக்கு பதிலடி தந்திருக்கிறார். இதனால் மீண்டும் சூடு பிடித்துள்ளது கூட்டணி சர்ச்சை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.