Skip to main content

“தமிழ்க் கலாச்சாரத்தின் பாதுகாவலன் பாஜக!” - ஜே.பி.நட்டா பேச்சு!

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

BJP government has ensured mother tongue education for all up to 8th standard

 

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திட்டக்குடி (தனி) தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் து.பெரியசாமியை ஆதரித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா திட்டக்குடி அருகிலுள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, “திட்டக்குடியானது சிதம்பரம் அருகில் உள்ள கடவுள் வைத்தியநாத சுவாமியின் பூமி, வெற்றியின் பூமி. தமிழ்நாடு வள்ளலார் சுவாமிகளின் பூமி. தமிழ் மொழியானது இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய மொழி. பிரதமர் மோடி, எங்கு சென்றாலும் தமிழ்மொழியை உச்சரிக்கிறார்.

 

ஐக்கியநாடுகள் சபையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற புறநானூற்றுப் பாடலை உச்சரித்தார் என்பதே தமிழ்மொழி எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை உணர்த்துகிறது. 48 ஆயிரம் கோவில்கள், 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் மற்றும் எண்ணற்ற மகான்கள் உதித்தது தமிழ் பூமி. ஜாதி, மத பேதமின்றி உலகம் எல்லோருக்கும் ஒன்று. பா.ஜ.க அத்தகைய உன்னத கொள்கையைப் பின்பற்றுகிறது. உலகத்திற்கே எடுத்துக்காட்டான இந்த தமிழ்க் கலாச்சாரத்தின் பாதுகாவலனாக பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடி திகழ்கின்றனர்.

 

BJP government has ensured mother tongue education for all up to 8th standard

 

பாரதத்தை உலகின் குருவாக மாற்றும் பிரதமரின் உன்னத குறிக்கோளோடு நாம் பாடுபட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் நோக்கத்தை உரைக்கிறேன். தி.மு.க, காங்கிரசின் குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும். பா.ஜ.க தனித்துவம் வாய்ந்த, வளர்ச்சியை முன்னெடுக்கக் கூடிய, தன்னலமற்ற கட்சி. 2ஜி என்பது மாறன் குடும்பத்தினர் இரண்டு தலைமுறையாக செய்த ஊழல், 3ஜி என்பது ஸ்டாலின் குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக செய்த ஊழல், 4ஜி என்பது காங்கிரஸ் கட்சி தலைமை நான்கு தலைமுறையாக செய்த ஊழல். ஊழலையே கலாச்சாரமாக கொண்ட காங்கிரஸ் தி.மு.க கூட்டணியை வீழ்த்த நாம் பாடுபட வேண்டும். தி.மு.க வெற்றிபெற மக்களின் உதவி தேவைப்படுவதால் ஓட்டுக்கேட்டு வருகிறார்கள். 

 

தி.மு.க என்பது குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து என்பதே அதன் விரிவாக்கம். காங்கிரஸ் கட்சி தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டதே இல்லை. தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்தது ஜெய்ராம் ரமேஷ். ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் தான். தமிழ்க்கலாச்சாரத்தை பாதுகாக்கும் காவலனாக பிரதமர் மோடி உள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையால் அடிக்கடி சுடப்பட்டனர். ஆனால் மோடி பிரதமரான பின் அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச எல்லையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து நீலப்புரட்சி மூலம் தக்க நிதியுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து மீனவர்கள் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். 

 

BJP government has ensured mother tongue education for all up to 8th standard

 

ஜாஃப்னா பகுதிக்கு முதல் இந்தியப் பிரதமராக மோடி சென்று பார்வையிட்டு, தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாகப் பார்த்து வீடுகளை இழந்து நின்ற மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார். இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார். தமிழ்க்கடவுள் முருகனை, கருப்பர் கூட்டம் இழிவுபடுத்தியபோது பா.ஜ.க தவிர வேறு எந்தக் கட்சியும் குரல் கொடுக்கவில்லை. பா.ஜ.க உரிய நடவடிக்கை எடுத்து வேல்யாத்திரையை மேற்கொண்டது. இதைப்பார்த்த ஸ்டாலினும் கையில் வேல் எடுத்து ஃபோட்டோவிற்கு போஸ் கொடுத்தார். தமிழ்க் கலாச்சாரத்தை பா.ஜ.க காப்பாற்றுகிறது என்பதற்கு இது மிகப்பெரிய உதாரணம். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்காக 90 ஆயிரம் கோடி கொடுத்தது. தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் அதை விட 500 மடங்கு அதிகமாக 19 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.

 

தற்போது 2020 - 21ல், 2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு முழு அக்கறை எடுத்துக்கொண்டுள்ளது. தமிழகத்தில் நெசவு தொழிற்சாலைகளுக்கு 16ஆயிரம் கோடி நிதி, தேசத்தின் முக்கியமான பாதுகாப்புக்காக சென்னை, கோவை, ஒசூர், திருச்சி, சேலம் பகுதி இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் வகையில், 7 லட்சம் கோடி ரூபாய் நிதி, சித்த மருத்துவம் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தாய்மொழி வழிக்கல்வியை உறுதி செய்துள்ளது. சென்னை மெட்ரோ பணிகளுக்காக 3,770 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 12 ஸ்மார்ட் சிட்டி, ரயில்வே துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி, மதுரை எய்ம்ஸ் மற்றும் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

 

BJP government has ensured mother tongue education for all up to 8th standard

 

வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத வகையில், தமிழகத்தின் வளர்ச்சியில் மோடி அக்கறை செலுத்தி வருகிறார் பிரதமர் மோடி. உள்ளூர்ப் பொருட்களுக்கு உலக அரங்கில் முக்கிய முத்திரை வழங்கப்பட்டு வருகிறது. பெண்கல்வி, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கப்பட்டு, ஆதிதிராவிட மக்களுக்கே வழங்கப்படும். கோவில்கள் மீட்கப்பட்டு, இளைய தலைமுறையினரின் கல்வி, தேவையான வசதிகள் செய்து தரப்படும். 8,9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.