Skip to main content

"பாஜக அரசு தடுப்பூசியில் கூட ஊழல் செய்கிறார்கள்!" - ஜோதிமணி எம்.பி பேட்டி! 

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

"The BJP government is corrupt even in vaccination!" - JyothiMani

 

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று (16.07.2021) செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.எஸ். சுப்பிரமணியம், வைத்திலிங்கம் எம்.பி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் செய்தியாளர் சந்திப்பில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மத்திய பாஜக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினார்.

 

அவர் கூறும்போது, "கரோனா பேரிடர் காலத்தில் தொடரும் எரிபொருள் விலையேற்றமானது பொது மக்களைக் கடுமையாக பாதித்துள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். கடந்த 6 மாதங்களில் 66 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 13 மாதங்களில் பெட்ரோல் லிட்டருக்கு 25.72 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 23.93 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் கலால் வரி ரூபாய் 23ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தட்டிக்கேட்டால் மத்திய அரசு மாநிலங்களுக்கான வாட் வரியைக் குறைத்துக்கொள்ளுமாறு அறிவுரை கூறுகிறது. அதேநேரத்தில், மத்திய அரசு மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி வரியை ஒழுங்காக தரவில்லை. பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் ரூபாய் 25 லட்சம் கோடியில் ஊரக வேலை திட்டம், சுகாதாரம், கல்வி போன்றவற்றிற்கு கூடுதல் நிதி எதையும் ஒதுக்கவில்லை. எங்கே போகிறது அந்தப் பணம்? அதனை எடுத்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை அளிக்கின்றனர். இது வேறு ரூபத்தில் தேர்தல் நிதியாக மீண்டும் பாஜகவுக்கு வருகிறது. அதனால்தான் கொள்ளையடிப்பதாக கூறுகிறோம்.

 

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. நரேந்திர மோடி குஜராத்தில் அடித்த கொள்ளை காரணமாக மத்திய அரசு தற்போது வேறுவழியில் அதற்குப் பணம் கொடுத்து சரி செய்கிறது. 

 

அளவுக்கு அதிகமாக வரி விதித்ததால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் விலையைக் குறைக்காமல் மக்கள் மீது திணிக்கிறார்கள். கலால் வரி உயர்த்தப்பட்டதால்தான் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துவருகிறது. பாஜக அரசு எரிபொருள் விலையை ஏற்றிக்கொண்டுவருவது சாதாரண மக்கள் மீது தொடுக்கப்படும் வன்முறையாகும். இந்த விலை உயர்வால் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசலின் வரியை உயர்த்திய மத்திய அரசு, ரூபாய் 24 லட்சம் கோடி வசூலித்துள்ளது. 

 

தோல்வியடைந்த மத்திய பாஜக அரசால் தற்போதைய நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது. நாட்டில் கடந்த 7 ஆண்டுகளில் 23 கோடி பேர் வறுமை கோட்டுக்கு கீழ் சென்றுள்ளனர். மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, நிர்வாக திறமையின்மை போன்றவைகளே இதற்கு காரணம். அத்தியாவசியப் பொருட்களான  பால்,  சமையல் எண்ணெய், நெய், பருப்புகள் என அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்ந்துவிட்டன.

 

மத்திய பாஜக அரசு தடுப்பூசியில் கூட ஊழல் செய்கிறார்கள். தடுப்பூசி தயாரிப்பதிலும் ஊழல் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியின் அழுத்தம் காரணமாகவே மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. மோடி அரசின் ஊழலை வெளிக்கொண்டுவரும் பணியைக் காங்கிரஸ் அரசு தொடங்கியுள்ளது. மோடி அரசின் மக்கள் விரோத செயல்களைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் அனைத்து மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.