நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்தது. இதற்கு அதிமுக இடைத்தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தியதால் நாடாளுமன்ற தேர்தலில் சரியாக களப்பணி செய்யவில்லை என்று கூறப்பட்டது. இதனால் அதிமுக மீதுபாஜக தலைமைக்கு அதிருப்தி ஏற்பட்டதாக பாஜக அரசியல் வட்டாரங்கள் கூறி வந்தனர். மேலும் அதிமுகவில் எடப்பாடியின் அதிகாரத்தை அதிகரிக்க ஒற்றை தலைமை, இரட்டை தலைமை பிரச்னை உருவானது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அனைத்து அதிகாரமும் எடப்பாடி எடுத்து கொண்டு ஓபிஎஸ் தரப்பை மதிக்காத சூழல் உருவானது.
இந்த நிகழ்வால் அதிமுக மீது கடும் கோபத்தில் பாஜக இருந்ததாக தெரிவிக்கின்றனர். சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடிக்கு பாஜகவிடம் இருந்து பல அதிர்ச்சி தகவலை கூறி அனுப்பியது. இந்த நிலையில் தமிழகத்தில் மழை வேண்டி யாகம் நடத்த அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அதிமுக தலைமை உத்தரவு படி அனைத்து மாவட்டங்களில் அதிமுகவினர் இன்று யாகம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் யாகம் நடத்தி வருவது பாஜக கோபத்தை குறைக்க அதிமுக எடுத்து வரும் நடவடிக்கை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.