பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பாவின் மகன்பி.ஒய்.விஜயேந்திராவுக்கு, நடக்கவிருக்கும் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகசீட்டு ஒதுக்காதது மிகப்பெரிய விஸ்வரூபமாக வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் வரும் மே 12ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக சமீபத்தில் வெளியிட்டது. அதில், வருணா தொகுதியில் எடியூரப்பாவின் மகனான விஜேந்திராவுக்கு பதிலாக, தொடடப்பா பசவராஜூ என்பவரின் பெயர் இடம்பெற்றது. இதனால், உட்கட்சிக் குழப்பம் ஏற்பட்டு, விஜயேந்திராவின் ஆதரவாளர்கள் மைசூருவில் உள்ள பாஜக அலுவலகத்தை சூறையாடினர்.
தேர்தல் நடக்க இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் சூழலில், தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபறக்கின்றன. வருணா தொகுதியில் சித்தராமையாவின் மகன் யதீந்திரா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து விஜயேந்திரா போட்டியிடாத நிலையில், அவரது ஆதரவாளர்கள் மக்களை நேரில் சந்தித்து ‘நோட்டாவுக்கு ஓட்டு போடுங்க மக்களே’ என்ற கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.
விஜயேந்திராவுக்கு சீட்டு கொடுக்கவில்லை என்பதால் நேற்று காலை விரக்தியடைந்தகட்சி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சக கட்சி ஊழியர்கள், இந்த பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதுதொடர்பாக பிரசுரங்கள் வெளியிடும் அவர்கள் அதில் தலைகீழ் தாமரையை அச்சிட்டுள்ளனர். மேலும், இதற்கு மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டேதான் காரணம் எனவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.