பாஜக மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார். இவரது தலைமையில் அக்கட்சியின் மீனவர் அணியினர் சென்னை நொச்சிக்குப்பத்தில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ, குங்குமம் உள்ளிட்டவைகளை வைத்து அவற்றுடன் கூட்டணி வேட்பாளரான அதிமுகவின் ஜெயவர்தனுக்கு வாக்களிக்குமாறு திருமண பத்திரிகை வடிவில் நோட்டீஸ் அடித்திருந்தனர்.
நொச்சிக்குப்பத்தில் அவர்கள் பிரச்சாரம் செய்யும்போது, மீனவர் ஒருவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த நபர், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தாங்கள் பாதிக்கப்பட்டோம் என்றும், மத்திய மாநில அரசுகளால் தங்களுக்கு எந்த நலனும் ஏற்படவில்லை உள்பட பல்வேறு பிரச்சனைகளை கூறியதுடன் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றார்.