Skip to main content

‘புது வரலாறே.. புறநானூறே..’ - வைரலான அண்ணாமலை; வசமாக சிக்கிய ஆதாரம்

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

bjp annamalai video goes viral social media

 

‘நாங்கெல்லாம் அண்ணாமலையோட ரசிகர்கள்..’ என பாஜக தலைவர் அண்ணாமலையின் படம் ஒட்டப்பட்டிருக்கும் மொபைலுடன் நிற்கும் சிறுவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பாஜகவினரால் வைரல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மண்டையில இருக்கும் கொண்டைய மறந்துட்டியேடா பாடி சோடா.. என நெட்டிசன்கள் அந்த வீடியோவை ரீட்வீட் செய்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் பாஜக உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயற்குழு கூட்டம் மற்றும் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை அரசியல் குறித்து தனது பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். அப்போது, அனைவரிடமும் கேட்கப்படும் அதே கேள்வி அண்ணாமலை முன்பும் வைக்கப்பட்டது. வாரிசா? துணிவா?.. சட்டென சுதாரித்துக்கொண்ட அண்ணாமலை இப்படிச் சொல்லி சமாளித்தார்..

 

“நடிகர் அஜித்தினுடைய உழைப்பு அசாத்தியமானது. அதேபோல் நடிகர் விஜய் தமது நடிப்பை முதல் படத்திலிருந்து தற்போதைய படம் வரை மிகச் சிறப்பாக மெருகேற்றி உள்ளார். அரசியலில் துணிவாக இருப்பேன்.. வாரிசு அரசியலை எதிர்க்கிறேன்.. நேரம் கிடைக்கும்போது வாரிசையும், துணிவையும் பார்ப்பேன்..” என ஈயம் பூசியது போலவும், பூசாதது போலவும் அண்ணாமலை பேசி முடித்தார். அண்ணாமலையின் இந்த பதிவு வைரலாகி வந்தது.

 

இந்நிலையில், இன்று விவேகானந்தரின் பிறந்தாநாள் விழாவை முன்னிட்டு பாஜகவினர் பலரும் பல்வேறு நிகழ்சிகளை நடத்திவந்தனர். அதில், ஒரு பகுதியாக சிறுவர்கள் சிலரை சந்தித்து.. அவர்களுக்கு நோட்டு புத்தகம், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர். இது அல்ல சமாச்சாரம்.. அந்த சிறுவர்கள் பேசிய அந்த வைரல் வீடியோதான் தமிழ்நாட்டையே கிறுகிறுக்க வைத்துள்ளது.

 

அந்தச் சிறுவர் கூட்டத்தில் ஒரு சிறுவன்.. அண்ணாமலை படம் போட்டிருக்கும் மொபைல் ஃபோனுடன் யாரிடமோ பேசிக் கொண்டு இருப்பது போல பேசிக்கொண்டிருக்க.. இதை வீடியோ எடுக்கும் பெண் ஒருவர்.. “என்னடா ரசிகர் மன்றம் வச்சிருக்கீங்க?” என அந்த சிறுவர்களை பார்த்து கேட்கிறார். அவர்களோ.. அண்ணாமலை ரசிகர் மன்றம் வச்சிருக்கோம் என மழலை மொழியில் கூறுகின்றனர்.

 

வீடியோ வெளியானதுதான் தாமதம்.. அண்ணாமலை ஆதரவாளர்கள் பலரும், ‘’புது வரலாறே.. புறநானூறே.. காலம் கனிந்துவிட்டது.. இனி தமிழகம் என்றால் அண்ணாமலைதான்” என ஏகத்துக்கும் வசனமெழுதி இந்த வீடியோவை ஷேர் செய்து வந்தனர். ஆனால், இதில் ட்விஸ்ட் என்னவென்றால்.. நெட்டிசன்கள் இந்த வீடியோவை சல்லி சல்லியாக நொறுக்கியுள்ளனர்.

 

ஆம்.. இந்த வீடியோவை நன்றாக ஒருமுறை ரீவைண்ட் செய்து பாருங்கள்... சிறுவர்கள் எல்லாம் கூடி நின்று அண்ணாமலை படம் போட்டுள்ள மொபைல் போனுடன் பேசிக் கொண்டிருக்கிறார்களா.. பெண் ஒருவர் உள்ளே நுழைந்து “என்னடா ரசிகர் மன்றம் வச்சிருக்கீங்க?” எனக் கேட்கிறாரா... இதுக்கு கொஞ்சம் முன் கவனியுங்கள்..

 

அந்தப் பெண் கேட்பதற்கு முன்பே.. இந்த சிறுவன் மட்டும் யாரோ சொல்லிக் கொடுத்ததை ஆர்வக்கோளாரில் முன்பே சொல்லிவிடுகிறான். ‘அண்ணாமலையோட ரசிகர்..” என மென்று முழுங்குகிறான். இதை எடுத்து வைத்துக் கொண்டுதான் நெட்டிசன்கள் பாஜகவினரை நெட்டித்தள்ளி வருகின்றனர். அது எப்படி திமிங்கலம்.. கேள்விக்கு முன்பே அந்த பையன் பதில் சொல்றான்.. கொண்டைய மறந்துட்டியே குமாரு.. என விளாசித் தள்ளுகின்றனர். இப்படி சிறுவர்கள் மத்தியில் அரசியலை புகுத்தும் ஆபத்தான விளையாட்டை பாஜகவினர் ஆடத் தொடங்கிவிட்டனர் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.