Skip to main content

'இது அருவருக்கத்தக்க அடக்குமுறை: உடனடியாக அரசு தலையிட வேண்டும்'-பாமக ராமதாஸ் வலியுறுத்தல்!

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

'Awful repression: Government must intervene' - PMK Ramadas insists!

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு எதிராகவும், மாணவர்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

'ஒரு பல்கலைக்கழகம் அதன் தகுதியிலிருந்து கீழிறங்கி பழிவாங்கும் கூடமாக மாறுவதும், அதற்காக நினைத்துக்கூட பார்க்க முடியாத ஆயுதங்களை பயன்படுத்துவதும் உயர்கல்வியின் எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.

 

பெரியார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் பிரேம்குமார், பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். ஆசிரியர் சங்க நிர்வாகி என்ற முறையில், அந்தப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக அவர் போராடி வருவதாக கூறப்படுகிறது. அதை சகித்துக் கொள்ள முடியாத பல்கலைக்கழக நிர்வாகம், அவர் பல்கலைக்கழகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி, அதற்கு 24 மணி நேரத்திற்குள் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியது. அதற்கு பிரேம்குமார் உடனடியாக விளக்கம் அளித்த நிலையில், அதை முறையாகக் கூட ஆய்வு செய்யாமல் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் ஆணையிட்டார்.

 

'Awful repression: Government must intervene' - PMK Ramadas insists!

 

பணியிடை நீக்கத்தை எதிர்த்து பிரேம்குமார் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் விரைவில் ஆணை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் பாலியல் சீண்டல்களும், அத்துமீறல்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்று தீவிரமாக போராடி வரும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி ஆகும். அதே நேரத்தில் பிடிக்காதவர்களையும், உரிமைகளுக்காக போராடுபவர்களையும் பழிவாங்குவதற்கான அருவருக்கத்தக்க ஆயுதமாக பாலியல் புகார்கள் பயன்படுத்தப்படக்கூடாது. பிரேம்குமார் ஒரு மாதத்திற்கு முன்பாகவே இடைநீக்கம் செய்யப்பட்டு விட்டார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் அவர் நுழைந்து ஒரு மாதத்திற்கு மேலாகும் நிலையில், அவர் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றத்தை அவர் எப்படி செய்திருக்க முடியும்?

 

பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டாலும் கூட அவர் மீண்டும் பணியில் சேர்ந்து விடக்கூடாது என்று பல்கலைக்கழகம் நினைப்பது தான் இந்த அநீதியான நடவடிக்கையின் பின்னணி காரணமாகும்.  பழிவாங்கப்படும் உதவிப் பேராசியருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள தமிழ்நாட்டின் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், பல்கலைக்கழக துணைவேந்தரையும், பொறுப்புப் பதிவாளரையும் இடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அதேபோல், பல்கலைக்கழக்கழக மாணவ, மாணவியரும் பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக போராடி வருகின்றனர். ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியோர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

அடுத்தக்கட்டமாக மாணவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன், பல்கலைக்கழக சிக்கல்கள் குறித்து மாணவர்கள் எந்த ஊடகங்களிடமும் தெரிவிக்கக்கூடாது என்று பல்கலைக்கழக சாசன விதிகளில் இல்லாத ஒரு பிரிவின்படி பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில் மாணவர்களிடம் கையெழுத்து பெறும்படி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். உறைவிடப் பள்ளிகளில் கூட இல்லாத அடக்குமுறைகள் பெரியார் பல்கலைக்கழகத்தில் கட்டவிழ்க்கப்படுகின்றன.

 

பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தான் மாற்றத்தின் விளைநிலங்கள். எது சரி, எது தவறு? என்று பகுத்துப் பார்க்கும் திறன் மாணவர்களுக்கு உண்டு. உரிமைகளுக்காக போராடும் உரிமையும், சக்தியும் மாணவர்களுக்கு உண்டு. அதன்படி தமிழ்நாட்டில் மாணவர்களால் தொடங்கப்பட்ட உரிமைப் போராட்டங்கள் தான் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய வரலாறு கொண்ட தமிழகத்தில் அநீதிக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தை முடக்க பெரியார் பல்கலைக்கழகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது. உலகின் கொடிய சர்வாதிகார நாடுகளில் கூட மாணவர்களின் போராடும் உரிமை மறுக்கப்பட்டதில்லை; போராடும் மாணவர்கள் மீது அடக்குமுறை ஏவி விடப்பட்டது கிடையாது.

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அவசரமாக செய்யப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், தொலைதூரக் கல்வி இயக்குனர், நூலகர், மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதி அடிப்படையில் முழுநேர அதிகாரிகளை நியமிக்காமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பு அதிகாரிகள் தான் தொடர்கின்றனர்; பல்கலைக்கழகத்தில் அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு ஊதியம் தருவதற்கு நிதி இல்லை; வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும் புதியப் பாடப்பிரிவுகள் தொடங்கப்படவில்லை; சொல்லிக்கொள்ளும்படியாக எந்த ஆராய்ச்சியும் இல்லை;  குறைந்த எண்ணிக்கையிலான காப்புரிமைகள் கூட பெறப்படவில்லை. இத்தகைய விவகாரங்களில் கவனம் செலுத்தி பல்கலைக்கழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய நிர்வாகம், உரிமைக்காக போராடுபவர்களை பழிவாங்குவதில் நேரத்தையும், திறனையும் வீணடிக்க வேண்டாம்.

 

பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 4 பணியாளர்கள் கடந்த மாதம் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் பல்கலைக்கழக நிர்வாகத்தை உயர்நீதிமன்றம் கடிந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் பழிவாங்குவதை விடுத்து ஆக்கப்பூர்வ பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். பெரியார் பல்கலைக்கழகத்தில் நடப்பவற்றை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விதிமீறல்கள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்' எனக் அவர் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.