Skip to main content

‘‘அருவா மூக்கு’’ திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்! 

Published on 07/12/2020 | Edited on 07/12/2020
 ramadoss

 

 

‘‘அருவா மூக்கு’’ திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக பெய்து வரும் மழை இன்னும் ஓயாத நிலையில், மாவட்டத்தின் பெரும்பகுதியை சூழ்ந்திருக்கும் மழை - வெள்ள நீர் இன்னும் வடியவில்லை; வடிவதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை. கடலூர் மாவட்டம் காலம் காலமாக மழை & வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் போதிலும், அதற்கு இன்று வரை நிரந்தரத் தீர்வு காணப்படாதது மிகுந்த வேதனையளிக்கிறது.

 

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், புரெவி புயல் ஆகிய இரு புயல்களாலும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டம் கடலூர் மாவட்டம்தான். நவம்பர் மாத இறுதியில் தாக்கிய நிவர் புயல் காரணமாக பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் சரி செய்யப்படுவதற்கு முன்பே, புரெவி புயல் பாதிப்புகள் தொடங்கி விட்டன. திசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் பெய்த மழை நேற்று சற்று ஓய்ந்திருந்தது.  ஆனால், இன்று காலை முதல் மீண்டும் அதி தீவிர கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் மாவட்டத்தின் எந்த பகுதியிலும் வெள்ளம் வடியவில்லை. 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலுமாக  துண்டிக்கப்பட்டுள்ளன. கிராமப்புற சாலைகள் முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளன. உத்தேசமாக பாதையை கணித்து தான் வாகனங்களில் செல்ல முடிகிறது.

 

மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள மக்களுக்கு முகாம்களுக்கு செல்ல விருப்பம் இல்லாததால் தங்களின் ஊர்களில் கிடைத்த இடத்தில் தங்கியுள்ளனர். சாலையோரங்களில் உள்ள கிராமங்களில் மட்டும் அரசு நிர்வாகம் சார்பிலும்,  தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் உணவு வழங்கப்படுகிறது. உட்புற கிராமங்களில் வாழும் மக்களுக்கு  உணவு கிடைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. அத்தகைய கிராமங்களில் உள்ள மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ம.க.வினர் உணவு தயாரித்து மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

 

கடலூர் மாவட்டத்தில் அரசு தரப்பில் நிவாரணப் பணிகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு சில நாட்கள் தாமதமானாலும் கூட, இந்த பாதிப்புகளில் இருந்து கடலூர் மாவட்டம் விரைவில் மீண்டு வந்துவிடும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் புயல் மற்றும் மழையில் சிக்கி வாழ்வுக்கும், இறப்புக்கும் இடையில் போராடும் கடலூர் மாவட்ட மக்களின் துயரத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும். அதற்காக தற்காலிக நிவாரணத்தைக் கடந்து தொலைநோக்குப் பார்வையுடன் அரசு சிந்திக்க வேண்டும்.

 

கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை இரு பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். முதலாவது கடலூர் மாவட்டத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாத சூழலை உருவாக்க வேண்டும். இரண்டாவது மழை - வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு முறையும் மழை-வெள்ளத்தின் போது பாதிக்கப்படுவது  குடிசைகளில் வாழும் கிராமப்புற மக்கள் தான். நகரப்பகுதிகளில் ஓட்டு மற்றும் கான்க்ரீட் வீடுகள் கட்டப்பட்டிருப்பதால் அங்குள்ள மக்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படுவதில்லை. ஆனால், கிராமங்களில்  மழை-வெள்ளத்தின் போது குடிசைகள் முற்றிலுமாக சேதமடைந்து விடுவதால், அவர்கள் ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வர வேண்டியுள்ளது. இப்போதும் கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள கிட்டத்தட்ட அனைத்து குடிசைகளும் இப்போது சேதமடைந்து விட்டன. அதற்கு மாற்றாக மீண்டும் குடிசைகள் அமைக்க நிதி உதவி அளிப்பதற்கு பதிலாக, குடிசைகள் இல்லாத கடலூர் மாவட்டம் அமைக்கும் நோக்குடன் குடிசைகளை இழந்த அனைவருக்கும் கான்க்ரீட் வீடுகளை கட்டித் தரும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

 

கடலூர் மாவட்டத்தில்தான் கொள்ளிடம், வெள்ளாறு, கெடிலம் ஆறு, மணிமுத்தாறு, தென்பெண்ணை ஆறு ஆகிய 5 ஆறுகள் கடலில் கலக்கின்றன என்பதால் மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கடலூர் மாவட்டத்தின் பெரிய ஏரியான வீராணம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர் உள்ளிட்டவை பெருமாள் ஏரியில் கலப்பதாலும், அதனால் பெருமாள் ஏரி நிரம்பி பரவனாற்றில் அதிக அளவு தண்ணீர்  திறந்து விடும்போது, அந்த நீர் தடையின்றி ஓட வழியில்லாததாலும் தான் பல கிராமங்களில் வெள்ளம் ஏற்படுகிறது. அதற்கு முடிவு கட்டும் வகையில் பரவனாற்று நீர் கடலில் எளிதாக கலப்பதை உறுதி செய்வதற்காக ‘‘அருவா மூக்கு’’ திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

 

பெருமாள் ஏரியில் வெள்ளம் ஏற்படுவதற்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்தான் முக்கியக் காரணம் என்பதால், அந்த ஏரியை பராமரிக்கும் பொறுப்பையும், அதற்கான செலவையும் அந்நிறுவனம்  ஏற்றுக் கொள்ள வேண்டும். கடலூர் மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் வெள்ளநீர் வடிகால்களை அமைக்க வேண்டும். இதற்காக பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர்களைக் கொண்ட குழுவை அமைத்து, அவர்களின் பரிந்துரைகளைப் பெற்று அதனடிப்படையில் சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். அந்தத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி விரைந்து செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் வெள்ளம் ஏற்பட்டாலும், அதிலிருந்து விரைவாக மீண்டு, இயல்பு நிலைக்கு திரும்பும் மாவட்டம் கடலூர் மாவட்டம் என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.