Skip to main content

மச்சானுக்கு எம்.பி. சீட் ஒண்ணு பார்சல்...! உறவுச் சொந்தமான விருதுநகர் நாம் தமிழர் வேட்பாளர்...

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

விருதுநகர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார் அருள்மொழித்தேவன். 

 

arulmozhidevan


முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகனான அருள்மொழித்தேவனின்  சகோதரி கயல்விழி,  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமானின் மனைவி ஆவார். மதுரையில் வசிக்கும் வழக்கறிஞரான அருள்மொழித்தேவனுக்கு விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு சீட் வழங்கியிருக்கிறது அக்கட்சி. 


இந்நிலையில் அருள்மொழித்தேவன், “நாம் தமிழர் கட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை உறுப்பினராக இருக்கிறேன். தமிழ் மீதான பற்றினாலேயே எனக்கு சீட் கிடைத்தது” என்கிறார். அருள்மொழித்தேவனின் அண்ணன் டேவிட் அண்ணாதுரை, அமமுக வேட்பாளராக மதுரையில் போட்டியிடுகிறார். 

 

‘மச்சானுக்கு எம்.பி. சீட் ஒண்ணு பார்சல்’ என்று வலைத்தளங்களில் கலாய்ப்பவர்களுக்கு சீமானின் தம்பிகள் ’முரசொலி மாறன் யாரு? கலைஞரின் அக்கா மகன். கலைஞர் யாரு? முரசொலி மாறனுக்குத் தாய்மாமன். திறமை இருந்ததனால்தானே முரசொலி மாறன் திமுகவில் வளர்ந்தார். மத்திய அமைச்சரும் ஆனார்.  குடும்ப அரசியல் என்று பேசும் காலமா இது?’ என்று பதிலடி தருகின்றனர். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“வரி வாங்கி ரோடு போட்டு, திரும்ப டோல் போட்டு வசூல் பண்றாங்க” - நா.த.க வேட்பாளர்!

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Naam Tamilar candidate Ezhilarasi campaign in Sivagangai

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சட்டெரிக்கும் வெயிலில் திறந்த வாகனத்தில் நின்று கீரமங்கலத்தில் வாக்கு கேட்டு பேசும் போது, “நாட்டின் கனிமவளங்கள் எல்லாம் கொள்ளை போய்விட்டது. ஆற்றில் தண்ணீர் ஓடி ஊற்றில் தண்ணீர் குடித்த காலம் மாறிப் போய் பாட்டிலில் தண்ணீர் வாங்கி குடிக்கிறோம். மழை பெய்தால் தான் தண்ணீர் வரும் போல என்று இன்றைய நம் பிள்ளைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நிலத்தடி நீரை, ஏரி குளங்களில் உள்ள தண்ணீரை உறிஞ்சும் தைலமரக்காடுகளை அரசாங்கமே வளர்க்கிறது. ஒட்டு மொத்த கனிம வளங்களும் காணாமல் போகிறது. எதிர்கால நம் பிள்ளைகளுக்கு எதை விட்டுச் செல்லப் போகிறோம்.

வரி வசூலிக்கும் அரசாங்கம் மக்களுக்கு கல்வி, மருத்துவம், கொடுக்க வேண்டும் ஆனால் நம்மிடம் வரியும் வாங்கிக் கொண்டு, கல்வி மருத்துவத்தையும் நம்மிடமே விற்க அனுமதிக்கிறது. நம்மிடம் வரி வசூல் செய்து சாலை போட்டு விட்டு பிறகு டோல் போட்டு அதற்கும் வரி வசூல் நடக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்” என்றார்.