
தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் நேற்று (08.06.2025) நடைபெற்ற பாஜக நிர்வாகிகளுக்கான பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வரும் 2026ஆம் ஆண்டு தேர்தல் பா.ஜ. க.வின் ஒவ்வொரு தொண்டருக்கும் மிக மிக முக்கியமான உயிர்ப்பான அவசியமான ஒரு களமாகும். 2024ஆம் ஆண்டும் நமக்கெல்லாம் மிக முக்கியமானது. அப்போதுதான் பிரதமர் மோடி 3வது முறையாக இந்த நாட்டின் பிரதமராகப் பதவி ஏற்றுக் கொண்டார். 2024இல் தான் ஒரிசா மாநிலத்தில் முழு பலத்தோடு முழு மெஜாரிட்டியோடு (பெரும்பான்மையோடு) பா.ஜ.க.வின் ஆட்சி அமைந்தது. அதேபோல ஹரியானாவிலும் 3வது முறையாக மிகப்பெரிய வெற்றி பதிவு செய்யப்பட்டது. அதேபோல மகாராஷ்டிராவிலும் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பா.ஜ.க. பதிவு செய்தது.
2025இல் டெல்லியில் எப்படி ஆட்சி அமைத்தோமோ அதேபோல 2026இல் தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி கண்டிப்பாக மலரப்போகிறது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள் 2026ஆம் ஆண்டில் நடைபெறப்போகும் தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கு ஆட்சியில் இருக்கிற திமுக ஊழல்... ஊழல்.... ஊழல்... என்று ஊழலில் தான் திளைத்துக் கொண்டிருக்கிறது. திமுகவின் ஆட்சியின் போது மத்திய அரசிலிருந்து பிரதமர் மோடி ஏழை மக்களுக்காகக் கொடுக்கும் பணத்தைக் கூட மக்களின் நலனுக்காகச் செலவிடாமல் அந்த பணத்தை எல்லாம் மடை மாற்றி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளைக் கிடைக்காமல் செய்வதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்குத் திமுக ஆட்சியில் ஏழைகள் விலைவாசி ஏற்றத்தால் வாழ்வாதாரங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சத்தாலும் அவர்கள் வாழ முடியாத சூழலில் அவர்கள் மத்திய அரசின் திட்டங்கள் கிடைக்காத சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் ''அப்பட்டமான பொய்; அருவருப்பான வஞ்சகம்; பிளவு நோக்கம் கொண்ட சூதுரை இந்த மூன்றை தவிர அமித்ஷா பேச்சில் வேறு எதுவும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாட்டினுடைய உள்துறை அமைச்சர் ஒரு மாநிலத்திற்கு வருகிற பொழுது அவருடைய தகுதி; பொறுப்பு; கடமை உணர்ச்சி இவைகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் அவதூறுகளை அள்ளிவீசியுள்ளார்.
மாற்றுக் கட்சி அரசாங்கம் அந்த மாநிலத்தில் நடந்தால் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சொல்வதும், மதவாத பிளவை வேண்டுமென்றே உண்டாக்கி அமைதியாக இருக்கும் ஒரு மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் கலவரத்தை தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் கிடைக்குமா அறுவடை செய்யலாமா என்ற அருவருப்பான உணர்ச்சியும் அவருடைய பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது.
இது கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லதல்ல. மாநில-ஒன்றிய அரசுக்கு இடையேயான சமூகமான போக்கிற்கு குந்தகம் விளைவிக்கும் பேச்சை அவர் பேசியுள்ளார். அவர் பேச்சை ஒவ்வொரு வாரியாக எங்களால் ஆதாரத்தோடு நிரூபிக்க முடியும். ஆனால் தமிழ்நாடு ஒரு அமைதி பூங்காவாக இருப்பதை விரும்பாமல் அரசியலுக்காக மிகவும் கீழ்த்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அமித்ஷாவின் பேச்சையும், போக்கையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். பாஜகவை பார்த்து எங்களுக்கு ஷாக் எதற்கு அடிக்க வேண்டும். எங்களால் ஷாக் அடிச்சு தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுடைய எந்தவிதமான பிளவுவாதமும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. மக்கள் தமிழக முதல்வரின் பின்னால் இருக்கிறார்கள். இதை புரிந்துகொள்ள முடியாமல்; தெரிந்துகொள்ள முடியாமல்; ஜீரணித்துக்கொள்ள முடியாமல் இங்கு வந்து பேசுகிறீர்கள். எங்களுக்கு எதற்கு பயம். உங்களைப் பார்த்தாலே சிரிப்பாக இருக்கிறது'' என்றார்.