Skip to main content

ஓ.பி.எஸ்ஸின் மிச்சமிருந்த பதவியையும் கைப்பற்றிய ஆர்.பி.உதயகுமார்... எடப்பாடி அதிரடி!

Published on 19/07/2022 | Edited on 19/07/2022

 

admk

 

பல்வேறு வகையான மோதல்களுக்கு பிறகு கடந்த 11 ஆம் தேதி வானகரத்தில் இரண்டாவது முறையாக அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி நீக்க, மறுபுறம் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஓபிஎஸ் நீக்கி வருகிறார். அதேபோல் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

 

admk

 

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் வகித்துவந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் நத்தம் விஸ்வநாதன்  நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்பொழுது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தமிழக எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஏகமனதாக ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எதிர்க்கட்சி துணை செயலாளராக அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே ஓபிஎஸ் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர், பொருளாளர், அடிப்படை உறுப்பினர் என அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மிச்சமிருந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் ஆர்.பி.உதயகுமாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்