Skip to main content

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: வன்னியர்களை புறக்கணிக்க கூடாது! -ராமதாஸ்

Published on 15/12/2020 | Edited on 15/12/2020
ddd

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்போது காலியாக உள்ள 7 நீதிபதிகள் பணியிடங்களுக்கு பரிந்துரைப் பட்டியலை அனுப்பும் போது அதில் வன்னியர்களுக்கும், புறக்கணிக்கப்பட்ட பிற சமுதாயங்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர் சமுதாய வழக்கறிஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். தகுதியும், திறமையும் இருந்தும் கூட தொடர்ச்சியாக  வன்னியர்கள் புறக்கணிக்கப்படுவது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது; இது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.

 

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 63 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. காலியாக உள்ள 12 பணியிடங்களில் 9 இடங்கள் வழக்கறிஞர்களைக் கொண்டும்,  3 இடங்கள் மாவட்ட நீதிபதிகளைக் கொண்டும் நிரப்பப்பட வேண்டும். வழக்கறிஞர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டிய 9 நீதிபதிகள் பணியிடங்களில் 5 பணியிடங்களுக்கு வழக்கறிஞர்களின் பெயர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த ஐவரில் ஒருவர் கூட  வன்னியர்கள் இல்லை என்பது தான் மிகவும் வருத்தமளிக்கும் உண்மையாகும். இப்போது மட்டுமல்ல... கடந்த சில வாரங்களுக்கு முன் மாவட்ட நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கி 10 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அவர்களிலும் ஒரு நீதிபதி கூட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை.

 

உயர்நீதிமன்றத்திற்கு அண்மையில் நியமிக்கப்பட்ட 10 நீதிபதிகள், இப்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 நீதிபதிகள் ஆகிய 15 நீதிபதிகள் பணியிடங்களில் குறைந்து 3 இடங்களாவது வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற நீதிபதிகள் நியமனத்தில் தான் கடைசியாக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதன்பின், இப்போது பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளையும் சேர்த்து மொத்தம் 17 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட வன்னியர்கள் இல்லை. இந்த அநீதியை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது.

 

உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு நடைமுறையில் இல்லை என்றாலும் கூட, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகங்களுக்கும், அனைத்து  பிராந்தியங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றமும், சட்ட ஆணையமும் பல்வேறு தருணங்களில் கூறியுள்ளன. வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதற்காக தகுதி மற்றும் திறமைகளில் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒருபோதும் நான் கோரியதில்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பல்வேறு காலகட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை விட தகுதியும், திறமையும் வாய்ந்த, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பலர் உள்ளனர். ஆனால், அவர்கள் வன்னியர்கள் என்பதற்காக திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதையே சமூக அநீதி என்கிறேன்.

 

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டில் ஒரு பரிந்துரை பட்டியலை உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவின் ஆய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பி வைத்தது. ஆனால், அந்தப் பட்டியலை உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு மாற்றாகவே இப்போது 5 பேர் கொண்ட பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முந்தைய பட்டியலில்  எந்தெந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தனவோ, அந்த சமுதாயங்களுக்கு இப்போது அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் பிரநிதிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முந்தைய பட்டியலில் வன்னியர் ஒருவர் இடம் பெற்றிருந்த நிலையில், அவருக்கு பதிலாக புதிய பட்டியலில் வன்னியர் எவரும் சேர்க்கப்படவில்லை என்பதே வன்னியர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு சிறந்த உதாரணமாகும்.

 

75 நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஐவர் மட்டுமே நீதிபதிகளாக உள்ளனர். அவர்களில் இருவர் அடுத்த சில மாதங்களில் ஓய்வுபெறவிருக்கும் நிலையில், வன்னியர் சமுதாயத்தினருக்கு வாய்ப்பு அளிக்காவிட்டால் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும்.

 

வன்னியர்கள் மட்டுமின்றி, மேலும் பல சமுதாயங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் நியாயமல்ல. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு பல்வேறு சமுதாயங்களைக் கொண்ட நாடு என்பதும் உண்மை. தகுதியின் அடிப்படையில் அனைத்து சமுதாயங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவது தான் உண்மையான சமூகநீதியாக இருக்கும். எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்போது காலியாக உள்ள 7 நீதிபதிகள் பணியிடங்களுக்கு பரிந்துரைப் பட்டியலை அனுப்பும் போது அதில் வன்னியர்களுக்கும், புறக்கணிக்கப்பட்ட பிற சமுதாயங்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.