Skip to main content

“முதலமைச்சரின் கைக்கூலியாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டுவருகிறது..”  சி.வி. சண்முகம்  

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

"The Anti-Corruption Department is working as a bribe to the Chief Minister." CV Shanmugam

 

முன்னாள் அமைச்சரும், அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலாளருமான சிவி சண்முகம் நேற்று விழுப்புரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “திமுக அரசு எதிர்க்கட்சியை பழிவாங்கும் நோக்கத்தோடு மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதம் ஆன போதிலும் இன்னமும் அதிமுகவை தான் குறை சொல்லி வருகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அரசு நிர்வாகம் மீது துளியும் கவனம் செலுத்தவில்லை. அதிமுக மீதான பழிவாங்கும் நடவடிக்கையை செய்து வருகிறது. அதை நாங்கள் சட்டரீதியாக சந்திக்க உள்ளோம். 

 

அரசு ஊழியர்கள் தயவு இல்லாமல் திமுக ஆட்சி அமைக்க முடியாது. இதை அவர்கள் மறந்துவிட்டனர். இன்று முதலமைச்சரின் கைக்கூலியாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டுவருகிறது. முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திக் கொண்டிருக்கும்போதே, லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அதிகாரி கந்தசாமி முதலமைச்சரை சந்திக்கிறார். காரணம், வேலுமணியை கைது செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் இலக்கு. ஆனால், அதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால் வேலுமணி கைது செய்யப்படவில்லை. 

 

இந்த அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள்; அச்சுறுத்தப்படுகிறார்கள். நேற்று முன்தினம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் மிகவும் நேர்மையான அதிகாரி. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அவரை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தினார்கள். ஆனால், அவர் அதற்கு மறுத்துவிட்டதால் பின்னர் அவர் பதவி நீக்கம்செய்யப்பட்டவர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பதினோரு லட்சம் பணம், 4 கிலோதங்கம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குக்காக அதிகாரி வெங்கடாசலம் அச்சப்படவில்லை. 

 

அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அவர் பகலில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு என்ன நடந்தது, அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது மர்மமாக உள்ளது. கடந்த மாதம் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடைபெற்று இரண்டரை கோடி பணம் கைப்பற்றப்பட்டது. ஆனால், அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அவருக்கு 10 நாளில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. எதிர்கட்சிகள் கேள்வி கேட்ட பின்பு அவர் கைது செய்யப்படுகிறார். முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்த வற்புறுத்தப்பட்டுள்ளார். அவர் மறுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி முன்னாள் அரசு மீது குற்றம் சுமத்த வேண்டும் என்று வலியுறுருத்தப்பட்டு அதற்கு வெங்கடாச்சலம் மறுத்ததால் அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கேள்வி எழுகிறது. 

 

எப்போதெல்லாம் திமுகவினர் மீது குற்றம்சாட்டப்படுகிறதோ அப்போதெல்லாம் அதிகாரிகள் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது. மரக்காணம் ஒன்றியக் குழுத் தலைவர் தேர்தலில் அங்கு பணி செய்யும் வட்டார வளர்ச்சி அலுவலர் மிரட்டப்பட்டு தோல்வி அடைந்தவரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்த அரசின் மீதும் காவல்துறை மீதும் நம்பிக்கை இல்லாததால் மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசலத்தின் மர்ம மரணத்திற்கான காரணத்தை சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த அரசால் அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். அதனால் அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.