Skip to main content

''வெற்றிலை பாக்கு போடுகிறீர்களா... குறை காண்பவர்களுக்கு அண்ணாவின் இந்த விளக்கமே போதும்''- மு.க.ஸ்டாலின் பேச்சு!  

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

Anna's explanation is enough for critics" - MK Stalin's speech!

 

ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஒரு பகுதியாக முதல்வரின் பதிலுரை இருக்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல்வர் அவரது நன்றியுரையைத் துவங்கி பேசினார். அதில், ''அறிவித்துள்ள திட்டங்கள் குறித்தும், அரசின் கொள்கைகள் குறித்தும் ஆளுநர் ஒவ்வொன்றாக விளக்கி பாராட்டி பேசினார். அதற்காக மாநில ஆளுநருக்கு எனது நன்றி. இவையெல்லாம் எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த பாராட்டுக்கள் இல்லை இந்த அமைச்சரவைக்கே கிடைச்ச பாராட்டு, இந்த அரசின் அங்கமாக இருக்கக்கூடிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு கிடைத்த பாராட்டு.

 

எங்களை ஆட்சிப்பொறுப்பில் அமர்த்திய மக்களுக்கு கிடைத்த பாராட்டு. அப்படிப்பட்ட உணர்வோடுதான் இந்த மாமன்றத்தில் நான் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன். திமுக ஆளுங்கட்சியாகவும் இருந்திருக்கிறது, எதிர்கட்சியாகவும் இருந்திருக்கிறது. 4/5/1957 அன்று ஆளுநர் உரைமீது பேசிய கலைஞர், 'மேன்மை தாங்கிய கவர்னர் உரையைப்பற்றி நான் போற்றவும் வரவில்லை; தூற்றவும் வரவில்லை; எனது கருத்துரையை ஆற்றவே வந்திருக்கிறேன்' என்றார்.

 

அதே நடுநிலை தவறாத பண்பைப் பெற்றிருப்பவர்கள் நாங்கள். அதிமுக ஆட்சி காலத்தில் திமுக அரசின் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது. அதிமுக ஆட்சியில் திமுக அரசின் திட்டங்களைப் புறக்கணித்ததை போன்று திமுக அரசு செயல்படாது. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் மூடப்படமாட்டாது என எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். 8.76 கோடி பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும்.

 

ஆளுநர் உரையில் இது இல்லை அது இல்லை என்று குறை சொல்பவர்களுக்கு அண்ணா இதே அவையில் கொடுத்த விளக்கம் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். 30/3/1967 அன்று அண்ணா ஆற்றிய உரையில், 'சில காரியங்கள் தேவையில்லை என்பதற்காக ஆளுநர் உரையில் விடப்படவில்லை. கோடிட்டுத்தான் காட்டுவார்கள். கவர்னர் உரையில் கோடிட்டுக் காட்டியதை வைத்துக்கொண்டு 'வெற்றிலை பாக்கு போடுகிறீர்களா என்று கேட்டால்' சுண்ணாம்பு இல்லாமல் போட்டுக்கொள்ள வேண்டும் என்று பொருளல்ல. அதற்காக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு போடுகிறீர்களா என்று யாரும் கேட்பதில்லை. வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்கிறேன் என்று சொன்னால் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும்தான் வரும். வெற்றிலை பாக்குதானே போட சொன்னார்கள் என்று சுண்ணாம்பை யாரும் புறந்தள்ள மாட்டார்கள். இதுபோல் கவர்னர் உரையில் அது இல்லை இது இல்லை என தள்ளிவிடலாமா? கவர்னர் உரையில் சில குறிப்பிட்ட விஷயங்கள் இருக்கும். நாம்தான் யூகித்துக் கொள்ள வேண்டும். குறை காண்பவர்களுக்கு அண்ணாவின் இந்த விளக்கமே போதும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.