Skip to main content

அண்ணாமலை VS முருகன்!-பாஜகவில் சமூகநீதி எங்கே?

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

 Annamalai VS Murugan! -Where is social justice in BJP?

 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்கக் கூட்டத்தின் நிறைவுநாள் பொதுக்கூட்டத்தை சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று (26/06/2022) நடத்தியது தமிழக பாஜக! இதில் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன், பாஜகவின் மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட சென்னையில் பாஜகவுக்கு கட்சி அமைப்பு ரீதியாக 7 மாவட்டங்கள் இருக்கிறது. இதில், 22 சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். அந்த 7 மாவட்டங்களின் சார்பில் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை துணைத்தலைவர் ஒருவரிடம்  ஒப்படைத்திருந்தார் அண்ணாமலை.

 

நிறைவு பொதுக்கூட்டம் என்பதால் 50 ஆயிரம் பேர் கூட்டத்திற்கு வருவார்கள் என்று அண்ணாமலை சொல்லியிருந்தார். இதனால் மாநில உளவுத்துறையும், காவல்துறையும் உன்னிப்பாக கவனித்தன. ஆனால், கூட்டத்தில் வெறும் 5 ஆயிரம் இருக்கைகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. இதனைக் கண்டு பாஜக தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அதிர்ச்சி.

 

bjp

 

இந்த நிலையில், கூட்டத்தில் அண்ணாமலை பேசும் வரையில் 5 ஆயிரம் இருக்கைகளும் நிரம்பியிருந்தன. அவர் பேசிவிட்டு அமர்ந்ததும் மொத்த  கூட்டமும் கலைந்து சென்றது. அண்ணாமலைக்கு பிறகு மத்திய அமைச்சர் முருகன் பேசும்போது வெறும் 200 பேர் மட்டுமே கூட்டத்தில் இருந்தனர். இதனால் போடப்பட்டிருந்த நாற்காலிகள் எல்லாம் காலியாகக் கிடந்தன. இந்த சம்பவம் பாஜக தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. .மேலும் பல புகைச்சல்களையும் இந்த கூட்டம் உருவாக்கியிருக்கிறது.

 

இது குறித்து பாஜக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, " பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால சாதனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடத்தினார்கள். ஒரே ஒரு மாவட்டம் இதனை ஏற்பாடு செய்தது.  அதில் 4 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே அடங்கியிருந்தது. அதாவது ஒரே ஒரு மாவட்ட பாஜகவினரின் ஏற்பாட்டில் நடந்த சாதனைக் கூட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். அதேபோல், நெல்லையில் நடந்த கூட்டத்திலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர்  கூடியிருந்தனர்.  ஆனால், சென்னையில் 22 தொகுதிகள் அடங்கிய  7 மாவட்டங்கள் சேர்ந்து நடத்திய கூட்டத்தில் வெறும் 5,000 பேர்தான் வந்தனர். இத்தனைக்கும் இந்த கூட்டம் கூட தலைக்கு 300 ரூபாயும், பிரியாணியும் கொடுத்தே அழைத்து வந்தனர். அண்ணாமலை கூறிய 50,000 பேர் எங்கே? அண்ணாமலை பேசி முடித்ததும் அந்த 5,000 பேரும் கலைந்து சென்று வெறும் 200 பேர்தான் இருந்தனர். அப்படியானால், சென்னையில் உள்ள பாஜகவின் 7 மாவட்டங்களையும் சேர்த்து பாஜகவின் வாக்கு வங்கி வெறும் 200 பேர் தான் என தெரிகிறது. மேலும்,  அண்ணாமலை பேசும் வரை இருந்த கூட்டம், அண்ணாமலை பேசி முடித்தும் கலைந்து போய்விட்டது. மத்திய அமைச்சர் முருகன் பேசும் போது கூட்டமே இல்லை என்றால் அண்ணாமலைக்காக கூட்டி வந்த கூட்டமா இது?

 

bjp

 

சமூக நீதியை பற்றி எங்கள் தலைவர்கள் வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆனால், கட்சியில் அந்த சமூக நீதி இல்லை. முருகன் பேசும்போது கூட்டம் கலைந்து செல்ல அனுமதித்தது யார்? அண்ணாமலைக்காக மட்டும்தான் கூட்டம் கூட்டப்பட்டதா? கூட்டம் கலைந்து சென்றபோது அண்ணாமலையோ, கூட்டத்தின் ஏற்பாட்டாளர்களோ ஏன் தடுக்கவில்லை?  அப்படியானால், தலைவர்களிடையே பாகுபாடு காட்டப்படுகிறது என்றுதானே அர்த்தம்? முருகன், பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பாகுபாடு காட்டப்படுகிறதா? ஏற்கனவே, கட்சியின் நிர்வாகிகள் நியமனத்தில் முருகனின் ஆதரவாளர்களை புறக்கணித்தார் அண்ணாமலை. முருகனின் சிபாரிசுகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இப்போது, பொதுக்கூட்டத்திலும், அண்ணாமலை பேசும் வரையில்தான் கூட்டம் இருக்க வேண்டும் என மறைமுகமாக உத்தரவுகள் போடப்படுகின்றன. இப்படிப்பட்ட அரசியல் தமிழக பாஜகவில் நடக்கும் போது, சமூக நீதியை பற்றி பாஜக தலைவர்கள் பேசுவது கேலிக்கூத்தாக இருக்கிறது " என்கிறார்கள் ஆவேசமாக.

 

இதற்கிடையே, இந்த கூட்டத்திற்காக 1 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் பாஜக நிர்வாகிகள் மத்தியில் புகைந்து கொண்டிருக்கிறது. இந்த புகைச்சலை தங்களின் தேசிய தலைமைக்கு புகாராக தட்டிவிட்டுள்ளனர் தமிழக பாஜகவினர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Next Story

வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Firing has taken place in polling station of Manipur Parliamentary Constituency

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு வரும் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  ஆனால் அதற்குள் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அடையாளம் தெரியாத நபரால் மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.