Skip to main content

தகுதி நீக்கத்திற்கு ஆதரவளித்த ராகுல் - பழசை நினைவூட்டும் அண்ணாமலை

 

annamalai tweet about rahulgandhi mp disqualification

 

இரு தினங்களுக்கு முன்பு அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய அவகாசம் வழங்கியுள்ளது. இந்த நிலையில்தான் நேற்று அவரது எம்.பி. பதவிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

 

அந்த வகையில் ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எதேச்சதிகாரம்’ என்று தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை முதலமைச்சரின் ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர், “எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தகுதி நீக்கத்திற்கு மூன்று மாத கால அவகாசம் கொடுத்த அவசர சட்டத்தை கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி ராகுல் காந்தி கிழித்து எறிந்தார். மேலும், அதனை ‘இது சுத்த முட்டாள்தனம்’ என்றும் தெரிவித்தார்.

 

தற்போது ராகுல் காந்தி அவதூறு வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்தே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வழக்கமாக மன்னிப்பு கேட்கும் ராகுல் காந்தி, பொதுவெளியில் பொய்களைப் பரப்பியதற்காக மன்னிப்பு கேட்டிருந்தார். இந்தத் தீர்ப்பு வழக்கமான பொய்யர்களை உலுக்கியிருக்கிறது. 2019ல் ரஃபேல் விவகாரத்தில் மோடிக்கு எதிரான ஊழல் வழக்கில் மூன்று பக்க மன்னிப்பு கடிதத்தை ராகுல் உச்சநீதிமன்றத்தில் கொடுத்துள்ளார். உங்கள் (மு.க.ஸ்டாலின்) அரசை கலைத்த ஒரு கட்சியுடன் நீங்கள் இன்று கூட்டணியில் இருப்பதை வரலாறு உங்களுக்கு நினைவூட்டியிருக்க வேண்டும். ஜனநாயகத்தை ஆதரிக்கும் மக்களாக மாறுவேடத்தில் இருக்கும் உங்களைப் போன்ற எதேச்சதிகாரர்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை நாங்கள் நிச்சயமாக அறிவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !