Skip to main content

“தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியே வர வேண்டும் என திருமாவளவன் முடிவு செய்துவிட்டார்” - அண்ணாமலை 

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

annamalai talk about vck and dmk alliance

 

தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியே வர வேண்டும் என திருமாவளவன் முடிவு செய்துவிட்டார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

 

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளை பா.ஜ.க தீர்த்துள்ளது. அதன் காரணமாக அந்த மாநில மக்கள் பா.ஜ.க விற்கு வாக்களித்துள்ளார்கள். காங்கிரஸின் கோட்டையாக இருந்த வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் முழுவதுமாக துடைக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி தான். பா.ஜ.க வில் அடிப்படையில் அனைவரும் உழைத்ததால்தான் இத்தகைய வெற்றி கிடைத்துள்ளது. அந்த மாதிரி காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் இல்லை. வழி நடத்த தலைவர்களும் இல்லை. அதுதான் அவர்கள் வீழ்ச்சி அடைய காரணம். ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம். 

 

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும். இந்த வெற்றி தி.மு.க வின் 23 மாத ஆட்சிக்கு மக்கள் கொடுத்த வெகுமதி அல்ல. 2024 ஆம் ஆண்டு தேர்தல் களம் முற்றிலும் வேறுபட்டது. பிரதமர் நரேந்திர மோடியை மையமாக வைத்தும் நடக்கும் தேர்தல். தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியே வர வேண்டும் என திருமாவளவன் முடிவு செய்துவிட்டார். ஒரு வாரமாக அவர் ஏன் பிதற்றுகிறார் எனத் தெரியவில்லை. பட்டியல் இன மக்கள் பா.ஜ.கவிற்கு அதிகமாக வருகிறார்கள். தி.மு.க வும், வி.சி.கவை கூட்டணியிலிருந்து வெளியேற்ற முடிவு செய்துவிட்டதை போல் தான் தெரிகிறது. அதற்கான ஆரம்ப கால அறிகுறிகள் தெரிகிறது. திருமாவளவன் கண் முன்னால் அவர் கோட்டை எனக் கூறப்படும் கடலூரில் பா.ஜ.க வளர்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம். யாரையும் அரவணைப்பது என் கடமையல்ல. 

 

2021க்கு முன்பு எப்படி இருந்தது என்பது எனக்கு தெரியாது. நான் தலைவராக பொறுப்பேற்ற பின்பு ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். ஒரு கட்சி இன்னொரு கட்சியை எப்படி நடத்த வேண்டும் என கூறினால் அது ஜனநாயகமாக இருக்காது.  நான் பா.ஜ.கவின் தலைவராக இருக்கும் வரை மற்ற கட்சியின் பிரச்சனையில் பா.ஜ.க தலையிடக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளேன். அ.தி.மு.கவில் பிரிந்திருப்பவர்களை இணைப்பது எங்கள் வேலை அல்ல. பிரதமர் மோடியை விஷ்வகுருவாக ஏற்றுக்கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம். கசாப்பு கடைக்கு செல்வதற்கு முன் ஆட்டை பிடித்து பார்த்தது போல் தான் உதயநிதி பிரதமரை சந்தித்தது. 

 

பத்தாண்டுகள் ஆட்சியிலிருந்த கட்சி தொடர்ந்து வெற்றி பெறும் என நினைப்பது தவறு. அரசுக்கு எதிரான மன நிலை மக்களுக்கு இருக்கும். அதனால் தான் அ.தி.மு.க 2021ல் தோல்வி அடைந்தது. காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் 2024லிருந்து 2026 வரை மிகப்பெரிய எழுச்சியாக இருக்கும். 2024 தேர்தல் பா.ஜ.கவிற்கானது. அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி தினமும் பா.ஜ.கவை விமர்சிக்கிறார்கள்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.