“தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை கொண்டு வர பா.ஜ.க விரும்புகிறது” - அண்ணாமலை

Annamalai says BJP wants to bring corruption-free governance in Tamil Nadu

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.

பல்வேறு கட்டங்களாக நடைபெறும் ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணம், அடுத்த ஆண்டுஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் நிறைவுபெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி இந்த நடைப்பயணத்தின் முதல் இரண்டு கட்டங்களாக மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை எனப் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிறைவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக நேற்று (15-11-23) அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தொகுதியில் அவர் தனது நடைப்பயணத்தை மேற்கொண்டார்.

இந்த நடைப்பயணத்தின் போது பேசிய அண்ணாமலை, “ஊழலற்ற ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என பா.ஜ.க விரும்புகிறது. ஒவ்வொரு மாவட்டமும் வளர்ச்சி அடையும்போதுதான் தமிழகம் வளர்ச்சியடையும். திமுக ஆட்சிக்கு வந்தபோது இருந்த தமிழகத்தின் வளர்ச்சி, தற்போது குறைந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் ஊழல் இல்லாத ஆட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்தியிருக்கிறார். அனைத்து ஏழை குழந்தைகளும் மருத்துவ கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மத்திய அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு வருகிறது.

தகுதி வாய்ந்த அனைத்து குழந்தைகளுமே மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்பதற்காகத்தான் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், திமுக பிரமுகர்கள் நடத்தக்கூடிய மருத்துவக் கல்லூரியில் கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டுவதற்காக நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் திமுக நாடகம் ஆடுகிறது. இதனை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்” என்று பேசினார்.

Annamalai neet
இதையும் படியுங்கள்
Subscribe