Skip to main content

“தமிழ்மொழி வளர்ச்சிக்கு தி.மு.க அரசு எதுவும் செய்யவில்லை” - அண்ணாமலை குற்றச்சாட்டு

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

annamalai said DMK government has done nothing development Tamil language

 

தி.மு.க தலைமையில் நடைபெறும் தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் கூறி தமிழக பா.ஜ.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன்படி  கடலூரில் கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். 

 

அவர் பேசுகையில், "தமிழ் மொழி வளர வேண்டும் என்று பா.ஜ.க தலைவர்கள் தமிழகத்தில் போராடி வருகிறார்கள். ஆனால், தி.மு.க.வினர் இந்த விஷயத்தில் நாடகமாடி வருகிறார்கள். இதனை மக்கள் மன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நிலையாகும்.

 

கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் 48 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதற்கு தி.மு.க. அரசு வெட்கி தலைகுனிய வேண்டும். இதைப் பார்க்கும் போது தமிழ்மொழி நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. 1960 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேரு இந்தி திணிக்கப்படாது என உத்தரவாதம் அளித்திருந்தார். 1965 ஆம் ஆண்டு இந்தியைத் திணிப்பதாகக் கூறி தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தது. இந்தி திணிப்பைக் கையில் எடுத்தால்தான் ஆட்சிக்கு வர முடியும் என்று போராட்டம் செய்தனர். 1965 ஆம் ஆண்டு இந்திக்கு எதிராக போராட்டம் நடத்துவதைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். 'இந்தி கூடாது என்பதல்ல’ என்று பெரியார் பேசியுள்ளார். ஆங்கில மொழியை அரசாங்க மொழியாக்க வேண்டும் என்று 1969-ம் ஆண்டு பெரியார் பேசியுள்ளார்.

 

1948-ஆம் ஆண்டு தமிழை விட ஆங்கிலத்தைக் கட்டாயமாக்கினால் அவர்களுக்கு ஓட்டு போடுவேன் என்று பெரியார் கூறினார். தமிழ் என்பது தெய்வீக மொழி. தமிழ் மொழி இறையாண்மை, சனாதனம் போன்றவைகளைக் கொண்டுள்ளது. தமிழ் மொழியை ஊக்குவித்தால் இறை நம்பிக்கை வளர்ந்து விடும். திருவாசகம், தேவாரம் போன்றவற்றை இன்றைய காலத்தில் பெற்றோர் தங்களது பிள்ளைகள் மத்தியில் படிக்க வைத்தால் தமிழும், இறைநம்பிக்கையும், இறைவழிபாடும் வளரும்.

 

தி.மு.கவினர் தமிழை இறக்கி விட்டு ஆங்கிலத்தை வளர்க்கிறார்கள். தமிழ் மொழிக்காக தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை. இந்தியைத் தொடர்ந்து திணிப்பதாக தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள். 1965-ல் இந்தி திணிப்பு போராட்டம் தொடங்கியதால் 1967-ல் தி.மு.கவினர் எளிதாக ஆட்சியை பிடித்தனர். அதே போன்று இப்போதும் இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர்.

 

தமிழ் மொழியில் 48 ஆயிரம் குழந்தைகள் தேர்ச்சி பெறாததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். தோற்று விட்டோம் என கூறி இருக்க வேண்டும். இந்தியை யாரும் திணிக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தில் ஒருவர் நடத்தி வரும் பள்ளியில் இந்தி இல்லை என மக்கள் மத்தியில் தெரிவிக்க முடியுமா? தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் நடிகைகளை நடிக்க வைத்துள்ளாரா? தமிழ் மொழி என்ற பெயரில் தி.மு.கவினர் நாடகமாடுகின்றனர். பிரதமர் மோடி, குழந்தைகள் 3வது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம் எனக் கூறி வருகிறார். ஆனால், தி.மு.க அரசு அதனைத் தடுக்கிறது" என்றார்.

 

முன்னதாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பா.ஜ.க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு திரண்டு வந்தனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதியில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி பாண்டியன் தலைமையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சக்தி கணேசன் முன்னிலையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்